×

தகாத உறவு தகராறில் உயிரோடு எரித்து மனைவியை கொன்ற கணவர் கைது

சேலம்: தகாத உறவு தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள சேலம் கேம்ப் காந்திநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (50), பெயிண்டர். இவரது மனைவி தமிழரசி (37). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். ராமகிருஷ்ணன் பெயிண்டிங் வேலைக்கு சென்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 24ம் தேதி வீட்டில் கணவன், மனைவி மட்டும் இருந்தபோது மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், தற்கொலை செய்து கொள்வதற்காக தமிழரசி உடலில் தின்னரை ஊற்றிக்கொண்டுள்ளார். பிறகு சிறிது நேரத்தில் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில் தமிழரசி அலறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் சென்று, அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடலில் பலத்த தீக்காயங்கள் இருந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த கருமலைக்கூடல் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழரசியிடமும் விசாரித்தனர். அப்போது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், மரண வாக்குமூலத்தை சேலம் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் பெற்றார். அந்த வாக்குமூலத்தில், தான் உடலில் தின்னரை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தேன். அப்போது பிள்ளைகளின் ஞாபகம் வந்து தற்கொலை எண்ணத்தை கைவிட்டு, உடலில் தண்ணீர் ஊற்றிக் கொள்ள சென்றேன். அந்த நேரத்தில் என் கணவர், என் மீது தீயை பற்ற வைத்து போட்டுவிட்டார் எனக்கூறியிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றி கருமலைக்கூடல் போலீசார் விசாரித்தனர். இக்கொலையில் ஈடுபட்ட ராமகிருஷ்ணனை போலீசார் அதிடியாக கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதுபற்றி போலீசார் கூறியது:கடந்த சில மாதங்களாக தமிழரசிக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ராமகிருஷ்ணன், அந்த தகாத உறவை கைவிடும்படி கூறி மனைவி தமிழரசியை கண்டித்து வந்துள்ளார்.

இதனால் அடிக்கடி தகராறு வந்துள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் மனைவி தமிழரசி தற்கொலை செய்துகொள்வதற்காக உடலில் தின்னரை ஊற்றியுள்ளார். பிறகு மனம் மாறி குளிக்க சென்றுள்ளார். அப்போது அவரது உடலில் தீயை பற்ற வைத்து போட்டு, எரித்து விட்டேன். சிகிச்சையில் இருந்த அவர் இறந்துவிட்டார், என ராமகிருஷ்ணன் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post தகாத உறவு தகராறில் உயிரோடு எரித்து மனைவியை கொன்ற கணவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Ramakrishnan ,Salem Camp Gandhinagar ,Mettur ,Salem district ,Tamilarasi ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...