×

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!!

சென்னை : கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார் .இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியரும், எம்எல்ஏவுமான எம் எச் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைப்பது தொடர்பாக டிசம்பர் 26, 2023 அன்று இந்திய ரஷ்யா நாடுகள் ஒப்பந்தத்தில் கையெப்பமிட்டுள்ளனர் என்று தெரிய வருகிறது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவில் உள்ள இந்திய மக்களுடனான கூட்டத்தில் டிசம்பர் 26 அன்று உரையாடிய போது “ என் முன்னிலையிலும், துணைப் பிரதமர் மன்துரோவ் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் எதிர்கால அலகுகள் தொடர்பான சில மிக முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் புதிய அணு உலைகளோ அல்லது வர்த்தக ரீதியிலான ஈனுலைகளோ தொடங்கப்பட்டால் அது அந்த பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

2018ல் குஜராத் மாநிலத்திலும் கர்நாடக மாநிலம் கோலார் தங்க சுரங்கத்தில் அணுக்கருவிகளை பாதுகாக்க முடிவெடுத்த போதும் அம்மாநிலங்களில் ஆட்சி செய்த பாஜக அதனைக் கடுமையாக எதிர்த்ததோடு அத்திட்டங்களை நிறுத்தியும் வைத்தது.ஆனால் தமிழ்நாட்டில் அணு உலைகளையும் அணுக்கழிவு மையத்தையும் மேலும் மேலும் உருவாக்கி வருவது கவலை அளிக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களும் மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இவற்றையெல்லாம் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகவே ஒன்றிய அரசு செயல்பட்டு வருவது புலனாகிறது. ஒன்றிய பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை ஒருக்காலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

அண்மையில் தூத்துக்குடியில் பெய்த பெருமழை கால நிலை மாற்றத்தின் தீவிரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி உள்ள நிலையில் புதிய உலைகளை அமைக்கும் முயற்சி சூழலியலுக்கு எதிரானது.கூடங்குளத்தில் புதிய அணு உலைகளையும் அணுக்கழிவு மையங்களையும் அமைக்கும் முடிவை அந்த பகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கடுமையாக எதிர்ப்பார்கள். ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மிகக் கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கு மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்,”என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சிக் கைவிடப்பட வேண்டும் : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Jawahirulla ,Chennai ,Jawahirullah ,M H Jawahirulla ,Humanist People's Party ,MLA ,
× RELATED தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்...