×

காஞ்சிபுரத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சிறுதானிய உணவு கண்காட்சியை எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். ஐக்கிய நாடுகள் சபையினால் 2023ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்களாகிய நுகர்வோர் இடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நடத்தப்படும் என தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், சிறுதானிய உணவு கண்காட்சியை காஞ்சிபுரம் எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில், சிறுதானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்த விவரங்களுடன் சிறுதானிய உணவுகளை சிறப்பாக தயார் செய்து, உரிய குறிப்புகளுடன் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசு துறைகள், சுய உதவிக்குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்புகளால் அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

மேற்படி, கண்காட்சி அமைப்புகளில் சிறப்பான பங்களிப்பினை வழங்கியவர்களுக்கு பரிசு தொகையும் மற்றும் சிறுதானிய விழிப்புணர்வு குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில், வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்துகொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்க்கொடி குமார், குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post காஞ்சிபுரத்தில் சிறுதானிய உணவு கண்காட்சி: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : grain food ,Kanchipuram ,Selvam ,Sundar ,Ezhilarasan ,International Year of Small Grains ,United Nations ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...