×

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்கு 9,968 மெட்ரிக் டன் அரிசி இருப்பு உள்ளது: அமைச்சர் காந்தி தகவல்

திருத்தணி: திருவள்ளுர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்கு 9,968 மெட்ரிக் டன் அரிசி இருப்பு உள்ளது என அமைச்சர் ஆர்.காந்தி கூறினார். திருத்தணி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சம்பா பருவ நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை தொடக்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஓ.என்.சுகபுத்ரா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் கௌசல்யா முன்னிலை வகித்தார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சம்பா பருவ நேரடி நெல்கொள்முதல் விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, திருவள்ளுர் மாவட்டத்தில் நடப்பு சம்பா (2023) பருவத்தில் 50,763 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் அறுவடை துவங்கியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்ய வட்டம் வாரியாக, ஆவடியில் 2, பூந்தமல்லியில் 2, பொன்னேரியில் 18, கும்மிடிப்பூண்டியில் 4, ஊத்துக்கோட்டையில் 9, திருவள்ளுரில் 18, திருத்தணியில் 9, பள்ளிப்பட்டில் 1, ஆர்.கே.பேட்டையில் 3 என மொத்தம் 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.

அரசு கட்டிடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 61 நிலையங்களும், இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் சார்பில் 5 நிலையங்கள் என மொத்தம் 66 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைகேற்ப படிப்படியாக திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின் படி விவசாயிகளிடமிருந்து ஒரு குவிண்டால் சன்னரக நெல் ரூ.2,310க்கும், பொதுரக நெல் ரூ.2,265க்கும் கொள்முதல் செய்யப்படும்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்ய ஏதுவாக பச்சரிசி 3,933 மெட்ரிக் டன்னும், புழுங்கல் அரிசி 3,961 மெட்ரிக் டன்னும் தயார் நிலையில் அரசுக்கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர அரவை ஆலைகளில் பச்சரிசி 543 மெட்ரிக் டன்னும், புழுங்கல் அரிசி 1,531 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்ய தயார் நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் பொது விநியோகத் திட்டத்திற்கு 9,968 மெ.டன் அரிசி திருவள்ளுர் மாவட்டத்தில் இருப்பில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் தீபா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.வேதவல்லி, துணை இயக்குநர் (வேளாண்மை) சுசீலா, துணை மேலாளர் பரமேஸ்வர ராஜா, கண்காணிப்பாளர் குழஞ்சிமணி, உதவி இயக்குநர் பிரேம், முன்னாள் மார்க்கெட்டிங் கமிட்டி தலைவர் ஆர்த்தி ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்திற்கு 9,968 மெட்ரிக் டன் அரிசி இருப்பு உள்ளது: அமைச்சர் காந்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur district ,Minister ,Gandhi ,R. Gandhi ,Tiruvallur district ,Samba ,Tiruthani regulation sales hall ,Thiruvallur ,district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில்...