×

சந்தித்த முதல் தேர்தலில் எம்எல்ஏ, தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் அரசியல் அசுர வளர்ச்சியும், பின்னடைவும்: பரபரப்பு தகவல்கள்


சென்னை: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்த விஜயகாந்த் 2005 செப்டம்பரில் மதுரையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தினார். அந்த கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டார். கட்சி ஆரம்பித்த உடனேயே தேர்தலை சந்திக்க ஆயத்தமானார். கட்சி தொடங்கிய கையோடு தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். கட்சியை ஆரம்பித்த அடுத்த ஆண்டே தேர்தலையும் சந்திக்க ஆயத்தமானார். தொடர்ந்து அவர் அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அந்த தேர்தலில் 8.38 சதவீத வாக்குகளைப் பெற்றது. ‘‘கருப்பு எம்.ஜி.ஆர்” என அழைக்கப்பட்ட அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். தேமுதிகவின் மற்ற வேட்பாளர்களில் பலர் தங்கள் டெபாசிட் இழந்தனர்.

பாமகவின் கோட்டையாக கருதப்பட்ட விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் சட்டமன்றத்தில் நுழைந்தார். இந்த வெற்றியின் காரணமாக தேமுதிகவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நிரந்தரமாக முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசத்தால் படித்த இளைஞர்களையும் புதிய வாக்காளர்களையும் அவரால் கவர முடிந்தது. அவருக்கென்று மகளிர் வாக்குகளும் கணிசமாக இருந்தன. பெரும்பாலும் அவரது கட்சியால் அ.தி.மு.க.வின் பாரம்பரிய வாக்குகள் பாதிப்படைந்தன என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் 2009 நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதிலும் தனித்தே விஜயகாந்த் போட்டியிட்டார். அதாவது, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 40 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டியிட்டது. அந்த தேர்தலில் அவருக்கு 10.06 சதவீத வாக்குகள் கிடைத்தன.

அதே நேரத்தில் விஜயகாந்த் தன்னை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாக நிரூபித்தார். 2011 சட்டமன்றத் தேர்தல் வந்தது. வாக்கு வங்கியை பிரித்ததால் அ.தி.மு.க, தே.மு.தி.க.வை தன் பக்கம் இழுக்கும் படலத்தில் தொடங்கியது. பண்ருட்டியார், சுதீஷ் ஆகியோருடன் சென்று விஜயகாந்த் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணியை முடிவு செய்தார். இந்த தேர்தலில் 41 இடங்கள் தேமுதிகவிற்கு வழங்கப்பட்டன. இடதுசாரிகளும் அடங்கிய இக்கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி என்று முடிவு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. கடும் பிரச்சினைக்கு மத்தியில் விஜயகாந்த் கட்சிக்கு எந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்பட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக தேர்தலையும் சந்தித்தது. கடைசியில் தே.மு.தி.க 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சட்டசபையில் தேமுதிகவிற்கு பிரதான எதிர்க்கட்சி ஆனது.

சட்டசபையில் அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக பிடித்தது. தேர்தல் முடிந்த கையோடு தேமுதிக, அ.தி.மு.க.வுடன் மோதல் போக்கு உருவானது. தொடர்ந்து இந்த மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்தது. இரண்டு கட்சியினரும் தேர்தலில் யாரால் வெற்றி பெற முடிந்தது என்று ஒருவருக்கொருவர் கடுமையாக குற்றம் சாட்டி பேசத் தொடங்கினர். இதன் உச்சக்கட்டமாக சட்டமன்றத்தில் நாக்கைக் கடித்து விஜயகாந்த் பேசியது பெரும் அமளியானது. சட்டசபையில் அதிமுக தேமுதிகவினர் கடுமையாக மோதிக் கொண்டனர். அத்துடன் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணியும் முடிவுக்கு வந்தது. விஜயகாந்த் குடித்துவிட்டு சட்டமன்றத்துக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதாவே பரபரப்பாக பேசினார். பதிலுக்கு அவரும் ஜெயலலிதா குறித்து பேசினார். இதனால், கூட்டணி முறிந்ததையடுத்து தேமுதிகவை உடைக்கும் படலத்தில் ஜெயலலிதா ஈடுபட தொடங்கினார்.

இதில் அதிமுகவுக்கு வெற்றி கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு முக்கிய பிரமுகர்கள் தேமுதிக பக்கம் தாவத் தொடங்கினர். தேமுதிகவும் உடைய தொடங்கியது. சட்டசபையில் தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் எட்டுபேர் தனி அணியாகச் செயல்பட ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். தொடர்ந்து அவர்கள் அ.தி.மு.க ஆதரவாகவே செயல்படவும் தொடங்கினர். மூத்த தலைவரான பண்ருட்டியாரும் கூடாரத்தைக் காலி செய்துவிட்டு, எம்.எல்.ஏ பதவியை விட்டு விலகி 2013ல் அ.தி.மு.க.வுக்குப் போய்விட்டார். 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க பாஜக மற்றும் ம.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்தது. எந்த இடத்திலும் வெல்ல முடியவில்லை. பிரச்சாரத்துக்கு வந்திருந்த மோடி, என் நண்பர் விஜயகாந்த் என்று குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.

அவரது பதவி ஏற்பு விழாவுக்கு டெல்லி சென்றிருந்த விஜயகாந்த், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு கண்ணில் தொடர்ந்து நீர் வடியும் பிரச்னை தலை தூக்கி இருந்தது. டெல்லியில் அவரை ஒரு நிருபர் ஏடாகூடமாக கேள்வி கேட்க, ‘ தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க..’’ என்று அவர் கூறினார். இதனால் மீடியாக்களுடன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. 2016 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேமுதிகவில் பலரும் வலியுறுத்தினர். அவரோ மூன்றாவது அணியான மக்கள் நலக்கூட்டணியுடன் கூட்டணி சேர்ந்தார். உடனே அவரது இரு எம்.எல்.ஏக்கள் விலகி தி.மு.க.வில் சேர்ந்தனர். பத்து மாவட்டச் செயலாளர்கள் விலகினர். தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை மக்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அந்த தேர்தலில் அந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்து. விஜயகாந்த், தான் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார்.

மூன்றாவது இடம் தான் அவருக்கு கிடைத்தது. டெபாசிட்டைப் பறிகொடுத்தார். தேமுதிகவும் சின்னாபின்னமாக தொடங்கியது. அடுத்து நடைபெற்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆரம்பத்தில் விஜயகாந்துடன் இருந்தவர்கள் அனைவரும் பிரிந்து சென்று விட்டனர். தேமுதிக வாக்கு வங்கியும் குறைய தொடங்கியது. இந்த நிலையில் விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வப்போது வெளிநாட்டுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் விஜயகாந்த். மேலும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் முழுமையாக அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா தான் கட்சியை பார்க்க தொடங்கினார்.

அவ்வப்போது விஜயகாந்த் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரால் பேசமுடியவில்லை. குரல் பிரச்சினை இருந்து வந்தது. கடைசியாக கடந்த 2 வாரத்திற்கு முன்பு தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த் கலந்து கொண்டார். அவரது நிலையை பார்த்து கட்சி தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். கேப்டனுக்கா இந்த நிலைமை என்று அவர்களுக்குள் கவலை ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் விஜயகாந்திடம் இருந்த தேமுதிகவும் பொது செயலாளர் பதவி பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டது. விஜயகாந்த்திடம் தலைவர் பதவி மட்டும்தான் இருந்தது. தொடர்ந்து விஜயகாந்த் பெயரில் வந்த அறிக்கைகள் அனைத்தும் பிரேமலதா பெயரில் வரத்தொடங்கியது. பிரேமலதா களத்தில் இறங்கி கட்சி பணியாற்ற தொடங்கினார். இந்த நிலையில் தான் தேமுகவினரால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் காலமானார்.

The post சந்தித்த முதல் தேர்தலில் எம்எல்ஏ, தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தின் அரசியல் அசுர வளர்ச்சியும், பின்னடைவும்: பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : MLA ,Vijayakanth ,CHENNAI ,Madurai ,National Progressive Dravida Kazhagam ,Demuthika ,Dinakaran ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது