×

தானியங்களை பிரித்தெடுக்க உலர்களமாக மாறிய ‘மெயின் ரோடு’-விபத்து அபாயத்தை தடுக்க கோரிக்கை

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம்,சித்தையன்கோட்டை, அழகர்நாயக்கன்பட்டி, சித்தரேவு, சிங்காரக்கோட்டை, நரசிங்கபுரம், கதிர்நாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம், நெல்லூர், ஒட்டுப்பட்டி பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக சோளம்,கம்பு, நிலக்கடலை போன்ற மானாவரி பயிர்களை பயிரிட்டனர்.
தொடர்ந்து பெய்த மழையால் மானாவரி பயிர்களின் விளைச்சல் அதிகரித்து தற்போது மானாவரி விவசாய பயிர்களின் அறுவடை துவங்கியுள்ளது.

நிலங்களில் விளைந்த சோளம்,கம்பு போன்ற தானியங்களை கதிரிலிருந்து பிரித்தெடுக்க உலர்கள வசதி இல்லாத காரணத்தினால், விளைந்த தானியங்களை இயந்திரம் கொண்டு கதிர்களிலிருந்து பிரித்தெடுக்க அதிக செலவாகும் என்பதால் அதிகளவில் வாகன போக்குவரத்து நிறைந்த அய்யம்பாளையம்-சித்தையன்கோட்டை மெயின்ரோட்டினை கதிரடிக்கும் களமாக மாற்றிவிட்டனர்.
இதனால் மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி மற்றும் திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஆத்தூர், செம்பட்டி போன்ற பகுதிகளுக்கு அதிகளவில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமடைந்து வருகின்றனர்.

மேலும் வாகனங்கள் செல்லும் பொழுது ஆபத்தை உணராமல் ரோட்டின் மைய பகுதியில் நின்று வேலை செய்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. கதிரிலிருந்து தானியங்களை பிரித்தெடுத்து சாக்குகளில் நிரம்பும் பணிகளும் ரோட்டில் தான் நடக்கின்றது.இதுமட்டுமின்றி தானியங்கள் பிரித்துதெடுக்கப்பட்ட கதிர்களை ரோட்டின் அருகாமையில் வைத்து தீ வைத்து விட்டு சென்றுவிடுகின்றனர்.

இதனால் இந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளிக்கின்றது. இதனால் ஏற்படும் புகை மற்றும் தூசியாலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
மேலும் சோளம் வழுக்கும் தன்மையுடையதாக இருப்பதால் இருசக்கர வானத்தில் செல்பவர்கள் வேகமாக செல்லும் போது வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. இதனை தடுக்க மானாவரி விவசாயிகளுக்கு மானாவரி விவசாய பயிர்களை உலர வைத்து காய வைக்க உலர்களமும், கதிர்களிலிருந்து சோளஅரிசியை பிரித்தெடுக்கும் இயந்திர வசதியும் விவசாய துறை சார்பில் அரசு அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாவாரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தானியங்களை பிரித்தெடுக்க உலர்களமாக மாறிய ‘மெயின் ரோடு’-விபத்து அபாயத்தை தடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pattiveeranpatti ,Ayyampalayam ,Sidthiankottai ,Alagaranayakanpatti ,Siddharevu ,Singkarakottai ,Narasinghapuram ,Kathirnayakanpatti ,Rengarajapuram ,Nellore ,Ottupatti ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...