*இரவிலும் போக்குவரத்து நெரிசல்
கூடலூர் : கிறிஸ்துமஸ் புது வருட பண்டிகை மற்றும் தேர்வையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கேரளா, கர்நாடகா பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு கூடலூர் வழியாக சென்று திரும்பும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக உள்ளூர் வாகனங்களான அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்களை சரியான நேரத்திற்கு இயக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நள்ளிரவு வரையிலும் இந்த போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. ஊட்டி கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெறும் சாலை பராமரிப்பு பணிகள் காரணமாகவும் இந்த போக்குவரத்து நெரிசல் உருவாகிறது. சாலை பராமரிப்புக்காக ஆங்காங்கே விரிவாக்கம் செய்யப்படும் சிறு பாலங்கள், மற்றும் கல்வெட்டுகளுக்கான பணிகள் நடைபெறும் பகுதிகளிலேயே இந்த போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. நேற்று முன்தினம் மாலையில் ஏற்பட்ட நெரிசல் நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. கூடலூர் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பல இடங்களிலும் நேரில் இரவு முழுவதும் சென்று வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதிகளை கண்காணித்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊட்டி கூடலூர் இடையே குறித்த நேரத்தை விட சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் வாகனங்கள் தாமதமாக குறிப்பிட்ட இடங்களுக்கு வந்து சேர்ந்தன. குறிப்பாக கூடலூரில் இருந்து கோவை, ஈரோடு, திருப்பூர், திருச்சி, போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் கூடலூருக்கு திரும்பி வரும் பேருந்துகள் சென்று சேரவும் திரும்பி வரவும் பல மணி நேரம் தாமதமாகின.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடியும் வரை இந்த வாகன போக்குவரத்து அதிகரிக்கும் என்பதால் காவல்துறையினர் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி, கல்லட்டி சாலை வழியாக ஒரு வழி பாதையாக திருப்பி விட்டால் கூடலூர் நடுவட்டம் சாலையில் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறையும் என உள்ளூர் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
The post விடுமுறை காரணமாக ஊட்டி-கூடலூர் சாலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு appeared first on Dinakaran.