×

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடக்கவுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் நந்திவரம் – கூடுவாஞ்சேரி, ஜி.எஸ்.டி. நெடுஞ்சாலையில் அமைந்துள்ள என்.பி.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அவைத் தலைவர் த.துரைசாமி தலைமை தாங்குகிறார். மாவட்ட துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., து.மூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இக்கூட்டத்தில் தி.மு.க. எம்பி, எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர – பகுதி – ஒன்றிய – நகர – பேரூர் செயலாளர்கள், தி.மு.க. அணிகளின் மாநில நிர்வாகிகள் – மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட தி.மு.க.வினர் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். வண்டலூர் அருகே, கிளாம்பாக்கத்தில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இம்மாத இறுதிக்குள் திறந்து வைக்க வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழியெங்கும் வரவேற்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும், இத்திறப்பு விழாவில் தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கில் பங்கேற்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. ஜனவரி மாதம் சேலத்தில் நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் இம்மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram North District DMK ,Kanchipuram ,Minister ,D.Mo.Anparasan ,Committee ,Dinakaran ,
× RELATED குன்றத்தூரில் வரும் 20ம்தேதி மாலை...