×

திருவள்ளூர் அருகே பரபரப்பு பிரியாணி கடை ஊழியர் கொலை: நேபாள இளைஞர் தப்பி ஓட்டம்

பூந்தமல்லி: திருவள்ளூர் பேருந்து நிலையம் எதிரில் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த அஜீஸ் அகமது என்பவர் அல்நூர் என்ற பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் பீகாரை சேர்ந்த மோபியாரா என்பவரது மகன் ராஜா (20) கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் நேபாள நாட்டைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். அப்போது, தான் கொண்டு வந்த உடமைகள், ஆவணங்கள் எல்லாம் தொலைந்து போனதாக கூறியுள்ளார். இதையடுத்து கடை உரிமையாளர் அஜீஸ்அகமது ஹோஹித் ஷர்மாவை வேலைக்கு சேர்த்துள்ளார்.

பிரியாணி கடையில் வேலை செய்பவர்கள் இரவு நேரத்தில் தங்குவதற்காக, திருவள்ளூர் ஏரிக்கரையோரம் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்துள்ளார். அதேபோல் உரிமையாளர் அஜீஸ்அகமது தங்குவதற்கும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வேலை அதிகமாக இருக்கும் போது இரவு நேரத்தில் அங்கு தங்குவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பீகார் இளைஞர் உடல்நிலை சரியில்லாததால் உரிமையாளர் தங்கும் வீட்டில் படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதே போல் நேபாள நாட்டைச் சேர்ந்த ரோஹித் ஷர்மா என்ற இளைஞரும் அங்கு சென்று படுத்துக் கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். நள்ளிரவு 11 மணி வரை ராஜா மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், நேற்று காலை ராஜாவும், ரோஹித் ஷர்மாவும் வேலைக்கு வராததால் உடன் வேலை செய்பவர்கள் உரிமையாளர் தங்கும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்த நிலையில் கிடந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது ராஜா அடித்து கொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு கொடுத்த தகவலின் பேரில் ஏஎஸ்பி விவேகானந்தா சுக்லா, இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ராஜாவின் உடல் அருகே கிடந்த பளு தூக்கும் கருவியால் தலையில் தாக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவின் சடலத்தை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். எதற்காக பீகார் வாலிபர் கொலை செய்யப்பட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே பரபரப்பு பிரியாணி கடை ஊழியர் கொலை: நேபாள இளைஞர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Poontamalli ,Alnoor ,Aziz Ahmed ,Ponneri ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி பகுதியில் பாஜக வேட்பாளரை...