×

பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை

பெரியபாளையம் : பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் மார்கழி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மார்கழி மாதம் பவுர்ணமி முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோயின்றி வாழவும், நேற்று மாலை 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் கலந்துகொண்ட பெண்கள் குத்துவிளக்கேற்றி குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக மூலவருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இதில் கோயில் அறங்காவலர் அஞ்சன்லோகமித்ரா, செயல் அலுவலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

The post பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvilakku Pooja ,Bhavani Amman Temple ,Periyapalayam ,Thiruvilakku Puja ,Margazhi ,
× RELATED பெரியபாளையம் அருகே சிவன், பார்வதி,...