×

குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி மதிப்பில் புதிதாக 1,000 வகுப்பறை கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி செலவில் 1000 புதிய வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறை கட்டிடங்கள்,

21 மாவட்டங்களில் ரூ.20.54 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 கிராம ஊராட்சி செயலகக் கட்டிடங்கள், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.24.39 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 102 ஊராட்சி மன்றக் கட்டிடங்கள் மற்றும் ரூ.15.46 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 5 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதார வசதிகள், சாலை வசதிகள், பாலங்கள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதத்தில், பழுதடைந்த ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலககளுக்குப் புதிய கட்டிடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருவதுடன், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரம், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற புதுமையான ஊரக வளர்ச்சி திட்டங்களையும் இவ்வரசு வகுத்து, அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தி வருகிறது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பெரியசாமி, காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் பொன்னையா, தொடக்கக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.155.42 கோடி மதிப்பில் புதிதாக 1,000 வகுப்பறை கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...