×

4 கூட்டுறவு நியாய விலை கடைகளில் நிவாரண தொகை தராததால் பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம்

திருவொற்றியூர்: சென்னை மாதவரம், மாத்தூரில் உள்ள 4 கூட்டுறவு நியாய விலை கடைகளில் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை பெற டோக்கன் பெற்றவர்களுக்கு, பணம் தராததால் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.6000 நிவாரண உதவி தொகை அறிவிக்கப்பட்டு, இந்த தொகையை நியாய விலை கடை மற்றும் கூட்டுறவு நியாய விலை கடைகளில் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர், தேதி வாரியாக உதவி தொகையும் வழங்கப்பட்டது. கடந்த 22ம் தேதியுடன் நிவாரண தொகை வழங்குவது முடிந்த நிலையில், சில கடைகளில் மேற்கொண்டு ஒரு நாள் அவகாசம் கொடுக்கப்பட்டு, 23ம் தேதியுடன் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாதவரம் அருகே மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் உள்ள 4 கூட்டுறவு நியாவிலை கடைகளில் 26, 27ம் தேதிகளில் நிவாரண தொகையை பெறுவதற்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று பொதுமக்கள் டோக்கனுடன் கூட்டுறவு நியாய விலை கடைக்கு பொதுமக்கள் வந்தனர். அப்போது கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள், பொதுமக்களிடமிருந்து டோக்கனை பெற்றுக் கொண்டு நிவாரண தொகை விநியோகிக்கும் தேதி முடிவடைந்து விட்டது. நிவாரண தொகையை வாங்காதவர்களின் பணத்தை அரசு கருவூலத்தில் திருப்பி ஒப்படைத்து விட்டோம். அதனால் நிவாரண தொகை தற்போது வழங்க இயலாது. அடுத்த அறிவிப்பில் தான் வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், நிவாரண உதவி தொகை வழங்க கோரி மணலி காமராஜர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கூட்டுறவு சார்-பதிவாளர் சிவக்குமார், துணை சார்-பதிவாளர் கமலக்கண்ணன், உணவு வழங்கல் துறை உதவி ஆணையர் எஸ்தர் ராணி, எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரமானந்தம், பால்பண்ணை காவல் ஆய்வாளர் வேலுமணி, மாதவரம் திமுக வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன், நிர்வாகிகள் தாமரை செல்வன், பாபு, உதயா ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு வந்து, டோக்கன் தேதி குறிப்பிடுவதில் ஊழியர்கள் தவறு செய்து விட்டார்கள். உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அடுத்த 3 நாட்களில் நிவாரண தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கிறோம், என கூறியதை ஏற்று பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post 4 கூட்டுறவு நியாய விலை கடைகளில் நிவாரண தொகை தராததால் பொதுமக்கள் சாலை மறியல்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : 4 Co-operative Fair Price Shops ,Tiruvottiyur ,fair price shops ,Madhavaram, Mathur, Chennai ,fair ,shops ,Dinakaran ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...