கோவில்பட்டி: தொடர் மழையினால் வீடு சேதமடைந்து வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது கூட தெரியாமல் கோவில்பட்டி மாற்றுத்திறனாளி தம்பதியினர் தவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதி சங்கரலிங்கபுரம். இங்குள்ள இரண்டாவது தெருவில் வசித்து வருபவர்கள் மாரிமுத்து – அடைக்கம்மை தம்பதியினர். இவர்கள் இருவரும் பார்வை இழந்த மாற்றுத்திறனாளிகள். ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவைகளை விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தங்களது வாழ்வினை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தொடர் மழை இந்த மாற்றுத்திறனாளின் தம்பதியின் வாழ்வினை அடியோடு புரட்டி போட்டு உள்ளது. இவர்கள் வாழ்ந்த ஓட்டு வீடு தொடர் மழைக்கு முற்றிலுமாக சேதம் அடைந்து காணப்படுகிறது.
தொடர் மழையின் போது வீட்டில் பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்தது தெரியாமலும், மழைநீர் உள்ளே வருவது தெரியாமலும் இருந்த மாற்றுத்திறனாளி தம்பதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு தங்கள் வீட்டில் தங்க வைத்து உதவி செய்துள்ளனர். தொடர் மழையினால் அவர்களுடைய வீடு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய சூழ்நிலை உள்ளது. தற்போது அந்த வீட்டில் தான் அந்த தம்பதியினர் வசிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மழை காரணமாக தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கதியாக நிற்கின்றனர் மாரிமுத்து – அடைக்கம்மை தம்பதியினர். எனவே, தங்களுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வாழ்க்கையை புரட்டி போட்ட மழை: வீட்டை இழந்து தவிக்கும் கோவில்பட்டி மாற்றுத்திறனாளி தம்பதி appeared first on Dinakaran.