×

சிக்கன் பூனா மசாலா

தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 கிலோ
எண்ணெய் – 1/4 கப்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை – 1
கருப்பு ஏலக்காய் – 2
பச்சை ஏலக்காய் – 4
கிராம்பு – 4
பட்டை – 2 இன்ச்
வரமிளகாய் – 2
வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (கீறியது)
தக்காளி – 1 கப் (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
தயிர் – 1/2 கப்
கசூரி மெத்தி – 1 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது

செய்முறை:

ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள் ஆகியவற்றை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.பின்னர் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் 3/4 டீஸ்பூன் உப்பு மற்றும் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை சேர்த்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். அடுத்து மீதமுள்ள மசாலா பொடியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.அதன் பின் தக்காளியை சேர்த்து, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் வதக்கிய மசாலாவை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அந்த தயிரை அப்படியே வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து, தீயைக் குறைத்து நன்கு கிளறி விட வேண்டும்.தயிர் நன்கு வெந்து மசாலா கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பின்னர் மற்றொரு அடுப்பில், ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், கிராம்பு, பட்டை, பச்சை ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மிதமான 2-3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.பின்பு அந்த சிக்கனை நீருடன் மற்றொரு அடுப்பில் உள்ள மசாலாவுடன் சேர்த்து, சிறிது நெய் ஊற்றி 2-3 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறிவிட்டு, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க, சிறிது சுடுநீரை 1/4 கப் ஊற்றி கிளறி விட்டு, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.சிக்கன் நன்கு வெந்ததும், அதன் சுவைப் பார்த்து வேண்டுமானால் உப்பு மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின் கசூரி மெத்தியை சேர்த்து கிளறினால், சுவையான சிக்கன் பூனா மசாலா தயார்.

The post சிக்கன் பூனா மசாலா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...