×

ஊரெங்கும் மீன் குழம்பு வாசம் பட்டைய கிளப்பிய பாரம்பரிய மீன்பிடி விழா

*மேலூர் அருகே கிராம மக்கள் உற்சாகம்

மேலூர் : மேலூர் அருகே பாரம்பரிய முறைப்படி நடந்த மீன்பிடி விழாவில் 3 கிலோ வரை எடையுள்ள மீன்கள் சிக்கியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.மதுரை மாவட்டம், மேலூர் அருகே செமினிப்பட்டியில் ஆண்டிபாலகர் மற்றும் உச்சிமாகாளியம்மன் கோயில் அருகில் உள்ளது கரும்பாச்சி கண்மாய். நெல் அறுவடைக்கு பிறகு இக்கண்மாயில் உள்ள நீரில் ஏற்கனவே விட்டு வளர்க்கப்பட்ட மீன்களை பொதுமக்கள் பிடிக்கும் மீன்பிடி விழா இங்கு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நேற்று இக்கண்மாயில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக கிராம பெரியவர்கள் துண்டு வீச, கண்மாயை சுற்றி நின்ற பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் சாதி மத வேறுபாடின்றி ஒரு சேர கண்மாயில் இறங்கினர்.தாங்கள் கொண்டு வந்த வலை, கச்சா, ஊத்தா உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதில் நாட்டு வகை மீன்களான கட்லா, ரோகு, கெழுத்தி, கெண்டை, குரவை போன்ற மீன்கள் சிறியது முதல் பெரியது வரை பிடிபட்டது. பலருக்கும் 2 முதல் 3 கிலோ எடையுள்ள மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் அவற்றை வீட்டிற்கு சென்று இறைவனுக்கு படைத்து உண்டனர்.

பிடித்த மீன்களை விற்பனை செய்ய கூடாது என்ற ஐதீகம் காரணமாக நேற்று அவ்வூரில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை தூக்கியது. இப்படி பாரம்பரிய முறைப்படி மீன்களை பிடித்து இறைவனுக்கு படைத்தால் மழை பெய்து, விவசாயம் அடுத்த வருடம் செழிக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.

The post ஊரெங்கும் மீன் குழம்பு வாசம் பட்டைய கிளப்பிய பாரம்பரிய மீன்பிடி விழா appeared first on Dinakaran.

Tags : Melur Melur ,Melur 3 ,
× RELATED மேலூரில் தினசரி காய்கறி சந்தையை தற்காலிகமாக மூட நகராட்சி ஆணையர் உத்தரவு