×

மேலாளரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2மணி நேரம் திடீர் வேலை நிறுத்தம்

* திருவண்ணாமலையில் பரபரப்பு

* 4 வாலிபர்கள் கைது: 4 பேருக்கு வலை

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பெட்ரோல் பங்க்கில் பணம் தர மறுத்ததை தட்டிக்கேட்ட மேலாளரை வாலிபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் நடவடிக்கை கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2 மணி நேரம் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 4 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில், நேற்று முன்தினம் இரவு வாலிபர்கள் தங்களுடைய பைக்குக்கு பெட்ரோல் நிரப்பினர். பின்னர், பணம் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல முயன்றனர். எனவே, ஊழியர்கள் பணம் கேட்டனர். அப்போது அவர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்கள், ‘எங்களிடமே பணம் கேட்கிறாயா’ என மிரட்டி தாக்க முயன்றனர். அதை, தடுக்க வந்த பெட்ரோல் பங்க் மேலாளர் ரகுராமன்(57) என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலையில் வெட்டுக்காயமடைந்த மேலாளர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து வந்து, பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அதன் அடிப்படையில், தப்பி ஓடிய வாலிபர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கிறிஸ்துமஸ் தினமான நேற்று இந்த திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் பெட்ரோல் பங்க்குகள் திடீரென மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் பெட்ரோல் பங்க்கில் பதிவான சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் திருவண்ணாமலை அடுத்த கீழ்நாத்தூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ்(24), வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த மணிவாசன்(21), ஜெகநாதன்(21), பார்த்திபன்(23) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.

The post மேலாளரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 2மணி நேரம் திடீர் வேலை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Punk ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலை கோயில் வழக்கை சிறப்பு...