×

மழை வெள்ளத்தால் சாலைகள் சேதம்: நவ கைலாய கோயில்களுக்கு இன்று பஸ்கள் நிறுத்தம்; சீரமைப்பு பிறகு இயக்கப்படும்

 

நெல்லை, டிச.24: நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நவகைலாயத்துக்கு இன்று இயக்கப்பட்ட இருந்த அரசு பஸ்கள் மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்ததைதொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாய கோயில்களுக்கு டிச.17, 24, 31, ஜன.7, 14 ஆகிய 5 நாட்கள் அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சிறப்பு பஸ்கள் காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்டு நவகைலாய கோயில்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) உள்ளிட்ட சிவாலயங்களுக்கு சென்றுவிட்டு இரவு நெல்லை புதிய பஸ்நிலையம் வந்துசேரும் வகையில் இயக்கப்பட்டன.

இந்த சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கடந்த 4ம்தேதி முதல் துவங்கி ஜன.13ம்தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை அனைத்து நாட்களிலும் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பயண கட்டணம் ஒருவருக்கு ரூ.600. இந்நிலையில் கடந்த 17ம்தேதி மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமை காலையில் நவகைலாயத்துக்கு 4சிறப்பு பஸ்கள் புதிய பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அன்று மாலை முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் பல இடங்களில் மழைவெள்ளம் சூழ்ந்ததால் தூத்துக்குடி, திருச்செந்தூர் வழித்தடத்தில் சாலைகள் பெரும் சேமடைந்தன. தற்போது சாலைகள் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. நவகைலாய கோயில்களில் திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூமங்கலம் (புன்னக்காயல்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளன. இத்தகைய வழித்தடங்களில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையவில்லை. இதனால் நெல்லை அரசு போக்குவரத்து கழகம் மூலம் நவகைலாயங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் இன்று (24ம்தேதி) ரத்து செய்யப்படுகிறது. சாலைகள் சீரமைக்கும் பணி முடிவடைந்ததும் வரும் 31ம்தேதி, ஜன.1, 7ம்தேதிகளில் நவகைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post மழை வெள்ளத்தால் சாலைகள் சேதம்: நவ கைலாய கோயில்களுக்கு இன்று பஸ்கள் நிறுத்தம்; சீரமைப்பு பிறகு இயக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Nava Kailaya Temples ,Nellai ,Nagulayam ,Dinakaran ,
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...