சென்னை: ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் அனைத்தும், டெர்மினல் 1ல் இருந்து 4ல் மாற்றப்பட்டுள்ளதால், நெரிசல்கள் குறைந்து பயணிகளுக்கு தாராளமான இடவசதிகள் கிடைக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே உள்நாட்டு முனையம் ஒரே முனையமாக இருந்தது. கடந்த நவம்பர் 15ம்தேதியில் இருந்து உள்நாட்டு முனையம், 2 முனையங்களாக டெர்மினல் 1, டெர்மினல் 4 என்று செயல்பட்டு வருகிறது.
புதிதாக உருவாக்கப்பட்ட, புதிய உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா மற்றும் அலையன்ஸ் விமான நிறுவனங்களின், வருகை புறப்பாடு விமானங்கள் கடந்த நவம்பர் 15ம்தேதியில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 23ம்தேதியான நேற்று முதல் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின், உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும் புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் 4க்கு மாற்றப்பட்டுள்ளன.
அதேபோல், வரும் 27ம்தேதியில் இருந்து தற்போது டெர்மினல் 1ல் இயக்கப்படும், விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்களின் வருகை புறப்பாடு விமானங்கள் அனைத்தும், புதிய உள்நாட்டு முனையமான டெர்மினல் 4ல் இருந்து இயங்க தொடங்குகின்றன. இதனால், பழைய உள்நாட்டு முனையமான டெர்மினல் 1ல் நெரிசல் இல்லாமல் பயணிகளுக்கு தாராளமான இட வசதி கிடைக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
The post விமான சேவைகள் மாற்றம் டெர்மினல் 1ல் நெரிசல் இன்றி இடவசதி கிடைக்கும்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.