×

எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்: 6,700 பேருக்கு தலா ரூ.7,500, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் கனமழையின்போது எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8 கோடியே 68 லட்சம் நிவாரணம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மிக்ஜாம் புயல் கனமழையால் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் கொசஸ்தலை ஆற்றில் எண்ணூர் முகத்துவார பகுதிகள் பாதிக்கப்பட்டது. இந்த எண்ணெய் கசிவுகளை உடனடியாக அகற்றிட தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிகழ்வில் காட்டுக்குப்பம், சிவன்படைகுப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், வ.உ.சி. நகர், உலகநாதபுரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது. மேலும் இந்த கிராமங்களை சார்ந்த மீனவர்கள் எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலாததால் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து, அத்தொகையை யும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கூடுதலாக எண்ணெய் கசிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மேற்கண்ட மீனவ கிராமங்களை சார்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.12,500 வீதமும் மேலும் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் ஒப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நிவாரண தொகை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மேலும் சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.5 கோடியே 2 லட்சம் நிவாரண தொகை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரண தொகை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8 கோடியே 68 லட்சம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

* 2,301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.12,500 வீதமும் 787 மீன்பிடி படகுகளை சரிசெய்திட படகு ஒன்றிற்கு தலா ரூ.10,000 வீதமும் மொத்தம் 3 கோடி ரூபாய் அரசினால் வழங்கப்படுகிறது.

* சென்னை மாநகராட்சி மண்டலம் 1, வார்டு 4, 6, மற்றும் 7 ஆகிய பகுதிகளில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 6,700 குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 வீதம் மொத்தம் ரூ.5 கோடியே 2 லட்சம் நிவாரண தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

The post எண்ணூரில் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணம்: 6,700 பேருக்கு தலா ரூ.7,500, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ennore ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Migjam storm ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...