×

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தை களைகட்டியது- ₹18 லட்சத்திற்கு வர்த்தகம்

ஒடுகத்தூர் : கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் வரத்து அதிகரித்து ₹18 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.வேலூர் மாவட்டத்தில், ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தைக்கு என தனி மவுசு உண்டு. இங்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் சந்தைக்கு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்கள் வளர்க்கும் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் வாரந்தோறும் ₹20 லட்சம் முதல் ₹25 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின்போது திருவிழாவையொட்டி பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை நடப்பது வழக்கம்.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று நடந்த ஆட்டு சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆடுகள் வாகனங்களில் விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டது. கடும் பனிப்பொழிவிலும் காலை 6 மணி முதலே விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.

அதேபோல், நாளை மறுநாள்(25ம் தேதி) கிருஸ்துமஸ் என்பதால் வியாபாரிகளும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை விற்பனை செய்ய தொடங்கினர். இதனால், ஆடுகளின் விலை கிடுகிடு வென்று உயர்ந்து ஒரு ஜோடி ஆட்டின் விலை ₹25 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்டது. இதனால், விற்பனைக்காக கொண்டு வந்த ஆடுகளை பலர் ஏமாற்றத்துடன் திருப்பி கொண்டு சென்றனர்.

ஆனால், கிருஸ்துமஸ் பண்டிகை என்பதால் சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக அதிகளவில் ஆடுகளை கொண்டு வந்தனர். மேலும், நேற்று நடந்த சந்தையில் ஒட்டு மொத்தமாக ₹18 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது என கூறினர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஒடுகத்தூர் ஆட்டுச்சந்தை களைகட்டியது- ₹18 லட்சத்திற்கு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Odukathur Goat Market ,Odugathur ,Christmas festival ,Odugathur Goat Market ,Vellore district ,
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...