புதுடெல்லி: ஜேஎன்1 வகை வைரஸ் பரவுவதால் சாதாரண சளி என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம் என்று விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார். கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் எழுந்துள்ள நிலையில் உருமாறிய ஜேஎன்1 வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறுகையில், ‘ஜேஎன்1 வகை கோவிட் பரவுவதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சாதாரண சளி என்று அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. அது கொரோனாவாக இருக்கலாம். நீண்ட கால உடல்நலப் பிரச் னைகளை ஏற்படுத்திவிடும். மாரடைப்பு, பக்கவாதம், மனநல பிரசனைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், கொரோனா அச்சுறுத்தலைசமாளிக்க முடியும். கடந்த 2021ம் ஆண்டில் கொரோனா வைரசின் உருமாறிய ‘டெல்டா’ வைரசை எதிர்கொண்ட அனுபவம் இந்தியாவுக்கு உள்ளதால், இப்போது பரவும் வைரசையும் கட்டுப்படுத்த முடியும்’ என்று கூறினார். முன்னதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பின்பற்ற மாநில அரசுகளை கேட்டுக் கொண்டதால் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு மீண்டும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
40 நாடுகளுக்கு பரவிய ஜேஎன்1
இந்தியாவில் 21 பேருக்கு ஜேஎன்1 வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 19 பேர் கோவாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனாவின் புதிய வகை வைரசான ஜேஎன்1 தொற்றானது இந்தியா உட்பட 40 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசியானது, ஜேஎன்1 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் என்றும், இதனால் மக்களுக்கு பெரிய ஆபத்து இல்லை என்றும், இருந்தும் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
The post ஜேஎன்1 வகை வைரஸ் பரவுவதால் சாதாரண சளி என்று அலட்சியம் வேண்டாம்: விஞ்ஞானி சவுமியா பேட்டி appeared first on Dinakaran.