×

வந்தவாசி அருகே மின் ஒயரை தூக்கியதால் தகராறு: விவசாயியை கத்தியால் வெட்டிய 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு

வந்தவாசி, டிச.22: வந்தவாசி அடுத்த ஆலியூர் கிராமத்தில் மின் ஒயரை தூக்கிய தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டிய 2 பெண்கள் உட்பட 4பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலை வீசி தேடிவருகின்றனர்.
வந்தவாசி அடுத்த ஆலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (57) விவசாயி. இவரது உறவினர் சங்கர்(49), பாபு (46) ஆகியோர்களுக்கு சொந்தமான நிலம் அருகருகே உள்ளன. கண்ணன் விவசாய நிலம் வழியாக சங்கருக்கு சொந்தமான பம்பு செட்டிற்கு மின் இணைப்பு ஒயர் உள்ளது. இந்நிலையில் கடந்த 12ந் தேதி அன்று கண்ணன் தனது நிலத்திற்கு டிராக்டர் மூலம் ஏர் உழுதார். அப்போது தாழ்வாகச் சென்ற மின் ஒயரை தூக்கியவாறு ஏர் உழுதபோது கட்டி வைக்கப்பட்டிருந்த கம்பு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சங்கர் கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அதில் சங்கருக்கு ஆதரவாக அவரது மனைவி கோகிலா, சகோதரர் பாபு, அவரது மனைவி சுமங்கலி (40) ஆகியோர் கண்ணனை தடியால் சரமாரியாக தாக்கி கத்தியால் தலை மீது வெட்டினார்களாம். இதனை தடுக்க வந்த கண்ணனின் மனைவி தமிழ்செல்வியையும் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் கண்ணன், தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளனர். தொடர்ந்து இருவரும் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து கண்ணன் வடவணக்கம்பாடி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து தலை மறைவாக உள்ள சங்கர் குடும்பத்தை சேர்ந்த 4 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

The post வந்தவாசி அருகே மின் ஒயரை தூக்கியதால் தகராறு: விவசாயியை கத்தியால் வெட்டிய 2 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Aliyur ,
× RELATED நெல் கொள்முதல் செய்வதற்கு விலை...