×

தம்பியை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய நண்பனை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணன்கள்: புளியந்தோப்பில் பரபரப்பு

பெரம்பூர்: தம்பியை போதைப்பழக்கத்திற்கு அடிமையாக்கிய நண்பனை, அண்ணன்கள் சரமாரியாக வெட்டிக் கொன்ற சம்பவம் புளியந்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. புளியந்தோப்பு கன்னிகாபுரம் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஜீவா ரயில் நிலையம் அருகே உள்ள முட்புதரில், கழுத்து மற்றும் உடலில் பலத்த காயத்துடன் வாலிபர் சடலம் கிடப்பதாக, புளியந்தோப்பு போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதன்பேரில், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு, கழுத்து மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயங்களுடன் வாலிபர் சடலம் கிடந்தது. அதை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், சடலமாக கிடந்தது புளியந்தோப்பு பி.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்த ரமேஷ் மகன் சீனு (எ) சீனிவாசன் (23) என்பது தெரியவந்தது. இவர் மீது 3 திருட்டு வழக்குகள் உள்ளன. மேலும் விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி போலீசார் கூறியதாவது: சென்னை ஓட்டேரி பி.எஸ்.மூர்த்தி நகரை சேர்ந்த சஞ்சய் (எ) கிரி (20), கடந்த 10ம் தேதி போதை ஊசி பயன்படுத்தியதால், அதே பகுதி கால்வாய் ஓரம் கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், சஞ்சய்க்கு அதிகளவில் போதை ஊசி, போதை மாத்திரைகளை வாங்கி கொடுத்து, போதை பழக்கத்திற்கு அடிமையாக மாற்றியது, அவரது நண்பரான சீனு என தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த சஞ்சையின் உடன் பிறந்த சகோதரர் வசந்த் மற்றும் உறவுமுறை அண்ணன் சூர்யா ஆகிய இருவரும் சேர்ந்து, தனது தம்பி சஞ்சய் இறப்புக்க காரணமான சீனுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு, சீனுவை நைசாக பேசி வரவழைத்து, சம்பவ இடத்தில் கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரையும் புளியந்தோப்பு போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தம்பியை போதை பழக்கத்திற்கு அடிமையாக்கிய நண்பனை சரமாரியாக வெட்டி கொலை செய்த அண்ணன்கள்: புளியந்தோப்பில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Pulianthop ,Perambur ,Pulyanthopu ,Kanikapuram ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு