×

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோயிலில் நாளை கருட தரிசனம்: 26ம் தேதி தேரோட்டம்


சுசீந்திரம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயில், மார்கழி திருவிழா கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சிகள் நடக்கிறது. 3ம் திருவிழாவான நேற்று காலை 8 மணிக்கு புஷ்பக விமான வாகனத்தில் சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு கற்பக விருட்சக வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதல், இரவு 12.15 மணியளவில் தங்கள் தாய் – தந்தையரான சிவன், பார்வதி தேவியை கோட்டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமாரசாமி ஆகியோர் சந்தித்து வலம் வரும் மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

மூவரும் மேளதாளம் முழங்க தங்கள் தாய்-தந்தையரை 3 முறை சுற்றி வலம் வந்து தாய் தந்தையருடன் கோயில் கருவறைக்கு செல்லும் நிகழ்வு நடந்தது. இதில் உள்ளூர், வெளியூரை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். 4ம் திருவிழாவான இன்று காலை 8 மணிக்கு பூத வாகனத்தில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10.30 மணிக்கு பறங்கி நாற்காலி வாகனத்தில் சுவாமி உலா வருதல் நடக்கிறது. இந்த நிலையில் 5ம் திருவிழாவான நாளை கருட தரிசனம் நாளை நடைபெற உள்ளது. காலை 5 மணிக்கு பஞ்சமூர்த்தி தரிசனம், ரிஷப, கருட, அன்ன வாகனத்தில் சுவாமி வீதியுலா வருதல், 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து சுவாமி-அம்பாள், பெருமாள்-அம்பாள் ஆகியோர் தாணுமாலயன் சுவாமி கோயிலில் தெற்கு பாகத்தில் உள்ள வீர மார்த்தாண்ட விநாயகர்கோயிலுக்கு வருகிறார்கள்.

கோயில் முன்பு கிழக்கு திசை நோக்கி நிற்க, வானில் கருடன் சுவாமிகளை வலம்வரும் கருட தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10.30 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 9ம் திருவிழா (26ம் தேதி) அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்பாளை தேரில் வைத்து காலை 8.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. 10ம் திருவிழா (27ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், நடராஜ மூர்த்திக்கு அஷ்டாபிஷேகம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடராஜர் வீதியுலா, இரவு 9 மணிக்கு திரு ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

The post குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் கோயிலில் நாளை கருட தரிசனம்: 26ம் தேதி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Karuda ,Suchindram Temple ,Kumari District ,Suchindram ,Susindram Thanumalayaswamy ,Kanyakumari district ,Margazhi festival ,Garuda ,Susindram temple ,Chariot ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...