×

ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் திடீர் மாயம் வேட்டவலம் அருகே பரபரப்பு

வேட்டவலம், டிச.20: வேட்டவலம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் திடீரென மாயமாக்கினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பேரூராட்சிக்குட்பட்ட வடக்குவெளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(50). இவரது மனைவி லட்சுமி(45). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் துர்கா(26) என்பவரை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தில் உள்ள இல்லோடு கிராமத்தில் வசிக்கும் அருள் பாண்டி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு மோனிகா(6), மகாலட்சுமி(4) என்ற மகள்களும், உதயா (ஒன்றரை வயது) என்ற மகன் உள்ளனர். 2வது மகளான சாமுண்டீஸ்வரி(23) என்பவரை கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள பாண்டூர் கிராமத்தில் மணி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு தர்ஷினி(4) என்ற மகளும் சபரிநாதன்(3) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் துர்கா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதேபோல் 2வது மகள் சாமுண்டீஸ்வரி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக அவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி துர்கா, சாமுண்டீஸ்வரி ஆகிய இருவரும் தங்களின் குழந்தைகளோடு திடீரென மாயமாகினர். இதனால் அதிர்ச்சியடைந்த லட்சுமி, மகள்கள் மற்றும் குழந்தைகளை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து நேற்று முன்தினம் லட்சுமி வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து மாயமான 7 பேரையும் தேடி வருகிறார். ஒரே குடும்பத்தில் 7 பேர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட 7 பேர் திடீர் மாயம் வேட்டவலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vettavalam ,Mayam Vettavalam ,
× RELATED உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ₹1.35...