×

மெட்ரோ ரயிலில் இதுவரை 24 கோடி பேர் பயணம்: நிறுவனம் தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் இதுவரை 24 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், நீண்ட தொலைவை குறைந்த நேரத்தில் கடப்பதற்காகவும் மெட்ரோ ரயில் திட்டம், கடந்த 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், சென்ட்ரல்- பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஆரம்பம் முதலாகவே சென்னைவாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் தற்போது, கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கிலோ மீட்டர் தொலைவுக்கும், மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீட்டருக்கும், மாதவரம் முதல் – சோழிங்கநல்லூர் வரை 47 கிலோ மீட்டர் தூரத்துக்கும் என 118.9 கி.மீ தூரத்துக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கி நேற்று வரை சுமார் 24 கோடி பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டைகளை பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி வரை 3 மாதங்கள் என ஒவ்வொரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து அவர்களுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post மெட்ரோ ரயிலில் இதுவரை 24 கோடி பேர் பயணம்: நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Metro ,CHENNAI ,Metro Administration ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட...