×

மார்கழியில் திருப்பாவை நோன்பு

ஆழ்வார்களிலேயே ஆண்டாளுக்கு தனித்த பெருமை உண்டு. வாழ்வின் லட்சிய நோக்கம் வைகுந்தம் அடைவது என்றால், அந்த வைகுந்த வான் போகத்தை வேண்டாம் என்று வெறுத்து, கர்ம பூமியான தர்ம பூமியில், பெரியாழ்வாருக்கு மகளாக இருக்கும் பெருமையை அடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அவதரித்தார் ஆண்டாள். ஒரு தாயானவள், தன் கணவனோடு எத்தனை உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும்கூட, தன்னுடைய குழந்தைகள் துன்பப்படுகின்றபோது, அவர்களோடு இருந்து, அவர்களை மீட்க வேண்டும் என்று நினைப்பாளே தவிர, தன் கணவனோடு அனுபவிக்கக்கூடிய உயர்ந்த ஸ்தானமோ, பேறோ, அவளுக்கு கசக்கவே செய்யும்.

பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள், கண்ணன் மேல் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தாள். அந்தக் கண்ணனையே மணக்க விரும்பி, மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் நோன்பு நோற்று, தான் அவ்வாறு நோன்பு நோற்ற விதத்தை முப்பது பாசுரங்கள் கொண்ட திருப்பாவை என்னும் பிரபந்தமாக பாடினாள்.

இந்த நோன்பை நோற்பதற்கு மார்கழி மாதத்தை ஆண்டாள் ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பதற்கான காரணங்களை ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் காண்போம்.

கோபிகைகள் காட்டிய வழி

ஆயர்பாடியில் பஞ்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தென்பட்ட வேளையில், ஊரில் மழை பொழிவதற்காக மார்கழி நோன்பு நோற்குமாறு ஊர்ப்பெரியவர்கள் கோபிகைகளை அறிவுறுத்தினார்கள். ஆனால், கண்ணனையே தங்கள் உயிராகக் கருதிய கோபிகைகள், ஊரார்க்கு மழை வேண்டும் என்ற பிரார்த்தனையோடு சேர்த்து, தங்களுக்குக் கண்ணனே கணவனாக வரவேண்டும் என்ற பிரார்த்தனையையும் முன்வைத்து மார்கழி நோன்பு நோற்றார்கள்.

அதிகாலையில் எழுந்து பஜனை செய்து கொண்டு யமுனா நதிக்கரைக்குச் சென்று, யமுனையில் நீராடிக் காத்யாயனி தேவியை வழிபட வேண்டும் என்பது நோன்புக்கான வரையறை. நோன்பு நோற்க யமுனை நதிக்கரைக்குச் செல்லும் கோபிகைகளுக்குத் துணையாகக் கண்ணனையே ஊர்ப் பெரியவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

இதனால், கோபிகைகளுக்கு இரட்டை மகிழ்ச்சி கண்ணனை மணப்பதற்காக நோன்பு நோற்கிறோம் என்ற மகிழ்ச்சி ஒருபுறம், கண்ணனே அதற்கு துணையாக வருகிறான் என்ற மகிழ்ச்சிமறுபுறம். ஆனால், இவற்றை விடவும் கோபிகைகளுக்கு எது மிகப்பெரிய மகிழ்ச்சி என்றால், கண்ணனுக்காக நோன்பு நோற்கும் மாதம் தற்செயலாக மார்கழி மாதமாக அமைந்ததே ஆகும்.

ஏனெனில், மார்கழி மாதக் குளிருக்குப் பயந்து ஊர்ப்பெரியவர்கள் யாரும் வெளியே வரமாட்டார்கள். அதனால் இடையூறின்றிக் கண்ணனை அனு பவித்து, அவனோடு ஆனந்தமாகக் களிக்கலாம் என்று எண்ணி மகிழ்ந்தார் களாம் கோபிகைகள். கண்ணனை மணக்க விரும்பிய ஆண்டாளுக்கு இந்த கோபிகைகளே முன்னோடிகள்! திருப்பாவை 26-ஆம் பாசுரத்தில், “மேலையார் செய்வனகள் பெரியோர்கள் எந்த விதத்தில் ஒரு செயலைச் செய்கிறார்களோ, அதே வழியைப் பின்பற்றி நாம் செய்ய வேண்டும்!” என்று பாடியிருக்கிறாள்.

அதனால்தான் கோபிகைகள் நோன்பு நோற்ற அதே மார்கழி மாதத்தில், தன்னையே ஒரு கோபிகையாக நினைத்து, தனது தோழிகளை எல்லாம் கோபிகைகளாக எண்ணிக் கொண்டு, தனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகக் கருதி, அங்குள்ள திருமுக்குளத்தை யமுனா நதியாக எண்ணி, அங்குள்ள வடபத்ரசாயீ திருக்கோயிலை நந்தகோபனின் இல்லமாகக் கருதி, அங்குள்ள பெருமாளையே கண்ணனாக எண்ணி, கோபிகைகளின் வழியை அப்படியே பின்பற்றி இந்த மார்கழி நோன்பை நோற்றாள் ஆண்டாள்.

கோபிகைகள் நோன்பு நோற்ற மாதம் மார்கழி என்பதால், அவர்களைப் பின்பற்றிய ஆண்டாளும் அதே மார்கழி மாதத்தில் இந்த நோன்பை அனுஷ்டித்தாள்.

பெருமானுக்கே பேருதவி புரிந்த மாதம்

ராமனின் பட்டாபிஷேகம் சித்திரை மாதத்தில் நடைபெற்றதால், அது மிகச் சிறந்த மாதம் என்று கூறுவார்கள். ஆனால், ஐந்து லட்சம் கோபிகைகள் ஒன்று கூடிக் கண்ணனுக்காக நோன்பு நோற்ற மார்கழி மாதம், சித்திரை மாதத்தை விடவும் பெருமை வாய்ந்ததாகும். ஏனெனில், சித்திரை மாதத்தில் தொண்டர்களான அயோத்தி மக்களுக்கு ராமன் என்கிற நல்ல தலைவன் கிடைத்தான். ஆனால், மார்கழியில்தான் தலைவனான கண்ணனுக்குக் கோபிகைகள் என்னும் நல்ல தொண்டர்கள் கிடைத்தார்கள்.

உண்மையான தொண்டன் (பக்தன்) கிடைப்பது அரிதல்லவா? அத்தகைய பக்தனைத்தானே இறைவனே தேடுகிறான்? அத்தகைய ஐந்து லட்சம் கோபிகைகளைக் கண்ணனுக்குத் தந்து கண்ணனுக்கே பேருதவி புரிந்த மாதம் என்பதால், மார்கழி மாதம் மிகச்சிறந்த மாதமாகச் சொல்லப்படுகிறது. எனவே அந்த மார்கழியைத் தன் நோன்புக்காகத் தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள்.

கேசவ மாதம்

வருடத்திலுள்ள அனைத்து மாதங்களுமே ஆண்டாளுக்கு உகந்தவையாக அமைந்திருக்க, அவள் மார்கழியைத் தேர்வு செய்ய என்ன காரணம்? மார்கழிக்கு என்ன தனிச்சிறப்பு? காலத்தால் ஆண்டாளுக்குப் பிற்பட்டவரான போதும், ராமானுஜரை ஆண்டாளின் அண்ணன் என்று கொண்டாடுகிறோம். திருப்பாவையில் ராமானுஜருக்கு உள்ள ஈடுபாட்டைக் கருத்தில் கொண்டு, ராமானுஜரைத் ‘திருப்பாவை ஜீயர்’ என்றே அழைக்கிறோம். அந்த ராமானுஜர் அவதரிக்கப் போகிற மாதம் சித்திரை என்பதை ஆண்டாள் முன்னமேயே அறிவாள்.

எனவே சித்திரை மாதம் அவளுக்கு மிகவும் பிடித்தமான மாதம் என்பதில் ஐயமில்லை. வேதம் அனைத்துக்கும் வித்தான திருப்பாவையைப் பாடிய ஆண்டாளுக்கு, அந்த வேதத்தை முதன்முதலில் தமிழாக்கம் செய்தருளிய நம்மாழ்வார் தோன்றிய வைகாசி மாதம் மிகவும் பிடித்தமானதே என்பதில் ஐயமில்லை. ஆண்டாளுக்குத் தந்தையாக மட்டுமின்றி, குருவாகவும் விளங்கிய பெரியாழ்வார் தோன்றிய ஆனி மாதமும் அவளது மனத்துக்கு மிகவும் உகந்த மாதமே ஆகும்.

ஆண்டாள் தோன்றிய மாதம் ஆடி. எனவே அதுவும்கூட அவளுக்கு இனியதே. அவள் மணக்க விரும்பிய கண்ணன் தோன்றிய மாதம் ஆவணி. எனவே அதுவும் அவளது மனம்கவர்ந்த மாதமே ஆகும். “வேங்கடவற்கு என்னை விதி” என்று ஆண்டாளால் ஆசையுடன் போற்றப்பட்ட திருவேங்கடமுடையான் அவதரித்த மாதமான புரட்டாசியும் அவளுக்குப் பிடித்தமான மாதமே.

“அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததி ஆழ்வார்களின் குலத்துக்கு ஒரே வாரிசு” என்று ஆண்டாளைப் போற்றினார் மணவாள மாமுனிகள். அந்த ஆழ்வார்களுள் முதல் மூவரான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் அவதரித்த ஐப்பசி மாதமும் ஆண்டாளுக்கு உகந்த மாதந்தான். ஆண்டாள் எந்த அரங்கனோடு கலக்க விழைந்தாளோ, அதே அரங்கனின் திருவடிகளில் கலந்த திருப்பாணாழ்வார் அவதரிக்கப் போகின்ற மாதம் கார்த்திகை என்பதையும் ஆண்டாள் அறிவாள்.

(திருப்பாணாழ்வார் ஆண்டாளுக்குக் காலத்தால் பிற்பட்டவர்) தை, மாசி, பங்குனி ஆகிய மாதங்களில் கண்ணனை அடைய விரும்பி ஆண்டாள் மதன கோபால உபாசனை செய்ததாக அவளே, “தை ஒரு திங்களும் தரை விளக்கி…”, “மாசி முன்னாள்…”, “காமன் போதரு காலமென்று பங்குனி நாள் கடைபாரித்தோம்…” முதலிய பாடல் வரிகளில் தெரிவித்திருக்கிறாள்.

இப்படி இத்தனை மாதங்களும் ஆண்டாளுக்கு உகந்த மாதங்களாகவே அமைந் திருக்க, இந்த நோன்புக்கு அவள் மார்கழியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? மற்ற மாதங்கள் எல்லாம் ஆண்டாளுக்கு உகந்த மாதங்களே! ஆனால், மார்கழிதான் திருமாலுக்கு மிகவும் உகந்த மாதமாகும். மார்கழிக்குக் கேசவ மாதம் என்றே பெயர்.

கீதையில் கண்ணன், “மாஸானாம் மார்கசீர்ஷோஹம்” (மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன்) என்று கூறுகிறான். அதனால், அவனை மணக்க விரும்பி நோன்பு நோற்கும் மாதம், அவனுக்கு உகந்த மாதமாக இருக்கவேண்டும் என்று கருதினாள் ஆண்டாள். அதனால்தான், மார்கழியைத் தேர்வு செய்தாள்.

இறை வழிபாட்டுக்கான மாதம்

கோயில்களில் திருமாலுக்குப் பூஜை செய்யும் முறையைக் கூறும் பாஞ்சராத்ர ஆகமம், வருடத்தின் முதல் மாதமாக மார்கழியையே சொல்கிறது. அதைப் பூஜ்ய மாதம் என்றும் அழைக்கிறது.
அதென்ன பூஜ்ய மாதம்? அமங்களமான மாதமா? வடமொழியில் ‘பூஜ்ய:’ என்றால் பூஜிக்கத்தக்கவர் என்று பெயர். அனைவராலும் வணங்கத்தக்கவரான இறைவனுக்குத்தான் பூஜ்யன் என்று பெயர். பூஜ்யனான இறைவனுக்குரிய மாதம் என்பதால், மார்கழி பூஜ்ய மாதம் எனப்படுகிறது.

பூஜிக்கத்தக்கவரான இறைவனைக் குறித்துப் பூஜைகளும் வழிபாடும் செய்யத்தக்க மாதம் என்று பொருள். எனவே இது மிகவும் மங்களகரமான மாதமே ஆகும். அப்புறம் ஏன் மார்கழியில் திருமணங்கள், புதுமனைப் புகுவிழாக்கள் போன்ற மங்கள நிகழ்ச்சிகளைச் செய்வதில்லை? புதிதாக வேலைக்குச் செல்பவர் தனது முதல் மாத ஊதியத்தை இறைவனுக் கென்று சமர்ப்பிப்பது போல், வருடத்தின் முதல் மாதமாக ஆகமங்களில் கூறப்பட்ட மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கு என்றே அர்ப்பணிக்கப்படுகிறது.

அவ்வாறு இம்மாதம் முழுவதும் இறைவழிபாட்டுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டிருப்பதால், அம்மாதத்தில் மற்ற விசேஷங்களைக் கொண்டாடினால் அது இறைவழிபாட்டிற்கு இடையூறாக இருக்கும் என்று கருதியே, மார்கழியில் மற்ற விழாக்களை நாம் தவிர்க்கிறோம். வருடத்தின் முதல் மாதமான மார்கழியை முழுவதுமாக இறைவனுக்கு நாம் அர்ப்பணித்து விட்டால், ‘தைப் பிறந்தால் வழிபிறக்கும்’ என்பதற்கேற்ப தை மாதம் தொடங்கி வருடம் முழுவதும் இறைவனின் அருளால் நமக்கு அனைத்து நன்மைகளும் மங்களங்களும் உண்டாகும் என்பது சாஸ்திரங்களின் கருத்தாகும். எனவே இறைவனுக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட மாதத்திலே நோன்பு நோற்க விரும்பி மார்கழியைத் தேர்ந்தெடுத்தாள் ஆண்டாள்.

மார்க்கங்களில் தலையாயது

மார்கழி மாதத்துக்கு வடமொழியில் ‘மார்கசீர்ஷம்’ என்று பெயர். ‘மார்க்கம்’ என்றால் வழி. ‘சீர்ஷம்’ என்றால் தலை. ‘மார்கசீர்ஷம்’ என்றால் மார்க்கங்களுள் தலையாயது என்று பொருள்படும். இறைவனை அடைவதற்குப் பலவிதமான மார்க்கங்கள் சொல்லப்படுகின்றன. சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கடமைகளைச் சரியாகப் பின்பற்றி, அவற்றின் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்தல் கர்ம மார்க்கமாகும். ஜீவாத்மாவையே சிந்தித்து தியானித்து அதை அறிதல் ஞானமார்க்கமாகும்.

இறைவனையே இடையறாது காதலுடன் சிந்தித்து தியானித்து வழிபடுதல் பக்தி மார்க்கமாகும். இறைவனை அடைய அவனே வழி என்று புரிந்து கொண்டு சரணாகதி செய்தல் பிரபத்தி மார்க்கமாகும். இப்படி இறைவனை அடையப் பல மார்க்கங்கள் இருந்தாலும், இவை அனைத்தை விடவும் தலையாய மார்க்கமாக இருப்பது எது என்றால் ‘ஆசார்ய நிஷ்டை’ ஆகும். ஆசார்ய நிஷ்டை என்பது யாதெனில், இறைவனின் வடிவமாக நம் முன்னே காட்சி தரும் ஒரு நல்ல குருவை அண்டி, அவரது திருப்பாதங்களே கதி என்று அந்த குருவிடம் சரணாகதி செய்வதே ஆகும்.

அதுதான் இறைவனை அடைவதற்கான எளிய மார்க்கமாகும், சிறப்பான மார்க்கமும் ஆகும். முக்திக்கான மார்க்கங்களுள் தலையாயதானபடியால், ஆசார்ய நிஷ்டைக்கு ‘மார்கசீர்ஷம்’ (மார்க்கம்=வழி, சீர்ஷம்=தலை) என்று பெயர். இப்படிப் பலப் பல பெருமைகள் மிகுந்த மார்கழி மாதத்தைத் தேர்ந்தெடுத்து ஆண்டாள் திருப்பாவையைப் பாடினாள்.

திருவெம்பாவை

வைணவத்தில் மார்கழி மாதத்தில் காலையில் திருப்பாவையைப் பாடி வருவது போல, சைவர்கள் மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவையை மார்கழி மாதத்தில் பாடி வருவார்கள். திருவண்ணாமலையில் சிவபெருமானைக் குறித்து பாடிய திருவெம்பாவை இருபது பாடல்களையும் ஆவுடையார் கோயிலில் சிவனை குறித்து அவர் பாடிய திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்களையும் பாடுவார்கள்.

`ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்’

– என்பது அதன் முதல் பாடல்.

இப்பாடல்களை மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாகக் கொண்டுள்ளனர். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாகவே இந்தப் பாடல்களைப் பாடி வருகின்றனர். இருபது பாடல்களைக் கொண்ட திருவெம்பாவையின் முதல் எட்டு பாடல்கள் சிவபெருமானின் புகழை வெகுவாகப் பாடி, ஒன்பதாவது பாடலில் சிவபெருமானிடம் தங்களுடைய கோரிக்கைகளைக் கூறி, பத்தாவது பாடலில் நீராட்டம் செய்வது எனும் அமைப்பில் உள்ளது.

இந்த மார்கழி மாதத்தில் தமிழகம் முழுவதும் உள்ள சைவ வைணவ ஆலயங்களில் காலை வேளையிலேயே சிறப்பு பூஜைகள் நடைபெறும். இறைவனின் நாமங்களை வீதியில் பாடி வருவதோடு மார்கழி மாதம் முழுவதும் வீட்டுக்கு இறைவனை வரவேற்கும் வண்ணம் பனிக் குளிரில் வீடுகளுக்கு விதவிதமான வண்ணக் கோலங்கள் போடுவார்கள். விளக்கேற்றி வைப்பார்கள்.

தொகுப்பு: கோகுலாச்சாரி

The post மார்கழியில் திருப்பாவை நோன்பு appeared first on Dinakaran.

Tags : Tirupavai ,Margazhi ,Andal ,Alwars ,Vaikuntha ,
× RELATED ஸ்ரீவில்லி. ஆண்டாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கம் சென்றது