×

காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்: உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு

சென்னை: மறைமலை நகர் காவல் நிலையத்தில் இளம் காதல் ஜோடி தஞ்சம் அடைந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயராம்பேடு பகுதியை சேர்ந்தவர் விமல் (23). ஏசி மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். இவர், பொத்தேரி பகுதியை சேர்ந்த பாண்டியன் ஜானகி தம்பதியினரின் மகள் (19). இவர், பொத்தேரி எஸ்ஆர்எம் கல்லூரியில் செவிலியர் படிப்பில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், விமலும் பாரதியும் கடந்த மூன்றாண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பெண்ணிற்கு திருமணம் செய்வதற்கான வயதில்லை என்பதால் காத்திருந்தனர். இதுகுறித்து பாரதி தனது பெற்றோரிடம் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கூறியுள்ளார். அதற்கு பாரதி வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விமலை பாரதிக்கு திருமணம் செய்துத்தர மறுத்துவிட்டனர். இதற்கிடையில், நேற்றைய முன்தினம் பாரதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. பாரதியை எங்கு தேடியும் கிடைக்காததால் பாரதியின் பெற்றோர் மறைமலைநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில்தான் காதலித்து வந்த விமலை திருப்போரூர் அருகே உள்ள ஒரு கோயிலில் தாலிகட்டி திருமணம் செய்துகொண்டு கூரைப்புடவை மற்றும் பட்டுவேட்டி சட்டையோடு மணக்கோலத்துடன் விமலும் பாரதியும் நேற்று முன்தினம் இரவு மறைமலைநகர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். காதல் ஜோடி தஞ்சமடைந்த விஷயத்தை பாரதி வீட்டிற்கு போலீசார் தகவல் அளித்தனர்.

தகவலறிந்து பாரதியின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு வந்தனர். அதனால், பரபரப்பு நிலவியது. போலீசார் முன்னிலையில் பாரதியிடம் அவரது பெற்றோர் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், நான் என் காதல் கணவர் விமலுடன் செல்கிறேன். அவருடன்தான் வாழ்வேன் என உறுதியாக கூறியதால் போலீசார் சட்டப்படி பாரதியை அவரது கணவர் விமலுடன் அனுப்பி வைத்தனர்.

The post காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்: உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Chiramalai Nagar ,Chengalpattu ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...