×

தனது மனைவியை கடை உரிமையாளர் அபகரித்துவிட்டதாக 15 கார்களின் கண்ணாடியை நொறுக்கிய கணவன் கைது: ராஜமங்கலம் பகுதியில் பரபரப்பு

பெரம்பூர்: ராஜமங்கலம் பகுதியில் தனது மனைவியை கடை உரிமையாளர் அபகரித்துவிட்டதாக கூறி, 15 கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியவரை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் ஐய்யப்பன் நகர் 200 அடி சாலையில் மீரான் (45) என்பவர், பழைய கார்களை வாங்கி, விற்கும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்கள் இதுகுறித்து ராஜமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று போதையில் இருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கொரட்டூர் சென்டர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த பூபாலன் (38) என்பது தெரியவந்தது. பூபாலனின் மனைவி, மீரான் கார் கடையில் வேலை செய்து வருகிறார். இது பூபாலனுக்கு பிடிக்கவில்லை. இதனால் மனைவியுடன் பூபாலனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

ஏற்கனவே கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் கொரட்டூர் காவல் நிலையத்தில் இருவரையும் அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பூபாலன் போதை மறுவாழ்வு மையத்தில் 4 மாதம் சிகிச்சை பெற்று, கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளார். வந்ததும் தனது மனைவி வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற பூபாலன், ஆத்திரத்தில் அங்கிருந்த கார்களின் கண்ணாடிகளை உடைத்தது தெரிய வந்தது.

அவரிடம் விசாரித்தபோது, எனது மனைவியை, மீரான் அபகரித்துக் கொண்டார். அதனால் ஆத்திரத்தில் மீரானின் கடையில் உள்ள கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினேன், என பூபாலன் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பூபாலன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதில் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

The post தனது மனைவியை கடை உரிமையாளர் அபகரித்துவிட்டதாக 15 கார்களின் கண்ணாடியை நொறுக்கிய கணவன் கைது: ராஜமங்கலம் பகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Rajamangalam ,Perambur ,
× RELATED ராஜமங்கலம் பகுதியில் ரவுடி கொலை...