×

ஊருக்குள் புகுந்து தண்ணீர் குடித்த காட்டு யானை

கோவை, டிச. 19: கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர், பேரூர், நரசிபுரம், தடாகம், உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மைக்காலமாக அதிக அளவு உள்ளது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களையும், ரேஷன் கடை, மளிகை கடைகளையும் சேதப்படுத்தி செல்லும் நிகழ்வு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நரசிபுரம் அடுத்த வெள்ளருக்கம்பாளையம் பகுதியில் நேற்று காலை சுமார் 5 மணியளவில் வந்த ஒற்றை காட்டு யானை பழனிச்சாமி என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து டிரம்மில் இருந்த நீரை குடித்துவிட்டு சென்றுள்ளது.

இது அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது. காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் உலா வருவதாலும், விளை நிலங்களை சேதப்படுத்தி செல்வதாலும் விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்திற்குள்ளாகி இருக்கின்றனர். வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி காட்டு யானைகள் ஊருக்குள் வராத வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊருக்குள் புகுந்து தண்ணீர் குடித்த காட்டு யானை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Thondamuthur ,Perur ,Narasipuram ,Tadagam ,Dinakaran ,
× RELATED தடுப்பணையில் மூழ்கி 3 மாணவர்கள் பலி