×

‘கொன்று தூக்கில் தொங்க விடுவதாக மிரட்டுகிறார்’வாடகைக்கு தங்கிய ரூ.6 கோடி மதிப்பு வீட்டை பறிக்க பாஜ தலைவர் முயற்சி: சேலம் கமிஷனரிடம் மூதாட்டி கண்ணீர் புகார்

சேலம்: சேலத்தில் வாடகைக்கு குடியிருக்கும் ரூ.6 கோடி மதிப்பிலான வீட்டை அபகரிக்க முயற்சி நடப்பதாக பாஜ தலைவர் மீது மூதாட்டி ஒருவர் கண்ணீருடன் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார். சேலம் செரி ரோட்டை சேர்ந்தவர் ராஜலட்சுமி (77). திருமணம் செய்யாதவர். இவர் நேற்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரியை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தாய் பாகிரதியுடன் பிறந்தவர்கள் சீனிவாசமூர்த்தி, ராஜாராவ். இதில் சீனிவாசமூர்த்திக்கு திருமணமாகி விவேகானந்த், முரளி ஆகிய மகன்கள் உள்ளனர்.

இவர்களில் முரளி திருமணம் செய்யாமல் இறந்து விட்டார். ராஜாராவ் ஸ்டேட் வங்கியில் பணியாற்றினார். அங்குள்ள கூட்டுறவு சங்கத்தின் மூலம் சூரமங்கலம் ஸ்டேட் பேங்க் காலனியில் கடந்த 1997ல் பிளாட் வாங்கினார். அதன்மதிப்பு தற்போது ரூ.6 கோடி இருக்கும். அவர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த 2021ல் ராஜாராவ் இறந்துவிட்டார். எனவே இந்த வீட்டிற்கு நானும் சீனிவாசமூர்த்தி மகன் விவேகானந்த் ஆகியோரும் சட்டப்படி வாரிசு.
அந்த வீட்டின் மேல் தளத்தில் பிரகாசம் என்பவரும் கீழ் தளத்தில் சேலம் மாவட்ட பாஜ கலை மற்றும் கலாசார அணி தலைவரான ராஜாராம் என்பவரும் வாடகைக்கு உள்ளனர்.

இதில் பாஜ பிரமுகரான ராஜாராம், வாடகை கொடுக்கவில்லை. இதனால் வீட்டை காலி செய்யும்படி தெரிவித்தேன். அப்போது அவர் ஆபாச வார்த்தையால் பேசி விரட்டி விட்டார். மேலும் அவரது கூட்டாளியான ரவீந்திரன் என்பவருடன் சேர்ந்து போலியான ஆவணம் தயார் செய்து அந்த வீடு தங்களுக்கு சொந்தம் என கூறி, விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

இதுபற்றி கேட்டபோது, ஆபாச வார்த்தைகளால் பேசியதுடன் கொன்று தூக்கில் தொங்க விடுவோம் என கூறுகின்றனர். எனக்கும் எனது மாமன் மகன் விவேகானந்த்துக்கும் ஏதாவது ஆனால் அதற்கு ராஜாராம் மற்றும் அவரது கூட்டாளிதான் பொறுப்பு. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதுடன் வீட்டையும் மீட்டுத்தரவேண்டும்’ என கூறியுள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் விஜயகுமாரி, சூரமங்கலம் போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

The post ‘கொன்று தூக்கில் தொங்க விடுவதாக மிரட்டுகிறார்’வாடகைக்கு தங்கிய ரூ.6 கோடி மதிப்பு வீட்டை பறிக்க பாஜ தலைவர் முயற்சி: சேலம் கமிஷனரிடம் மூதாட்டி கண்ணீர் புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Salem ,Commissioner ,
× RELATED சேலம் கிழக்கு மாவட்ட பாஜ தலைவருக்கு...