×

முதல் மனைவியின் மகன்கள் அடித்து துன்புறுத்துவதாக முதியவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழச்சேரி பாத்திமாபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் மகன் பாலாஜி(58). பிளம்பர் வேலை செய்து வரும் இவர் தற்போது 2வது மனைவி சுஜாதாவுடன் வசித்து வருகிறார். பாலாஜியின் முதல் மனைவி லலிதா. இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் முதல் மனைவி லலிதா உயிரிழந்தார்.
இந்நிலையில் முதல் மனைவியின் மகன்கள் சிவா(21), ரஞ்சித்குமார்(19) ஆகிய இருவரும் சொத்து தகராறு காரணமாக தந்தை பாலாஜி மற்றும் 2வது மனைவி சுஜாதாவையும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதாக கூறப்படுகிறது.

இது குறித்து முதியவர் பாலாஜி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தனது 2வது மனைவி சுஜாதாவுடன் வந்த பாலாஜி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற முதியவரை மீட்டனர்.

அப்போது முதல் மனைவியின் மகன்கள் சொத்து தகராறு காரணமாக தன்னையும் தனது இரண்டாவது மனைவியும் அழித்து துன்புறுத்துவதாக மப்பேடு போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எங்களுக்கு உயிர் பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் பாலாஜி மற்றும் சுஜாதாவை விசாரணைக்காக திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

The post முதல் மனைவியின் மகன்கள் அடித்து துன்புறுத்துவதாக முதியவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BALASUNDARAM MAHAN BALAJI ,FATIMAPURAM ,KADAMBATTUR UNION OF THIRUVALLUR DISTRICT ,Dinakaran ,
× RELATED பாத்திமாபுரத்தில் 10 நாட்களாக கழிவுநீருடன் தேங்கி நிற்கும் மழைநீர்