×

மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு தடையால் பாதிக்கப்படும் நாட்டு இன மலை மாடுகள்: பராமரிப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

* ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் தட்டுப்பாடு அபாயம்

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மலைமாடுகள் மேய்ச்சலுக்கு தடையால், நாட்டு இன மலை மாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், வளர்ப்போரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதோடு, ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையோரம் வத்திராயிருப்பு அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில் உள்ள கான்சாபுரம், வ.புதுப்பட்டி, சேதுநாராயணபுரம், நெடுங்குளம், கூமாப்பட்டி, தாணிப்பாறை, மகாராஜபுரம் ஆகிய ஊர்களில் ஆயிரக்கணக்கில் நாட்டு இன மலை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை 6 மாதம் காலம் மலைப்பகுதியில் மேய்க்கின்றனர். 6 மாதம் காலம் விளைநிலங்களில் மேய்க்கின்றனர்.

தேவைப்படும் விவசாயிகளின் நிலங்களில் கிடை அமைக்கின்றனர். மாடுகளின் சாணத்தை உரத்திற்காக பயன்படுத்துகின்றனர். இந்த இயற்கை உரத்தால் விளைநிலங்களில் விளைச்சல் நன்றாக இருக்கும். இந்நிலையி, மலைப்பகுதியில் மலை மாடுகள் மேய்ச்சலுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால், மலைமாடுகளுக்கும், அவைகளை வளர்ப்போருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வனத்துறை நடவடிக்கையால், நாட்டு இன மலை மாடுகள் அழிவை நோக்கி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேய்ச்சல் நிலம் இல்லாததால், நூற்றுக்கணக்கான மலை மாடுகளை வைத்திருந்தவர்கள், தற்போது எண்ணிக்கையை குறைத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும்…
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு, நாட்டு மலைமாடுகளில் இருந்துதான் காளைகளை தேர்ந்தெடுக்கின்றனர். மலைமாடுகளின் எண்ணிக்கை குறைந்தால், ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் பற்றாக்குறை ஏற்படும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வளர்க்கப்படும் நாட்டு இன மலைமாடுகளில் இருந்து கன்றுகளை ஜல்லிக்கட்டு காளைக்காக மதுரை, அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு, உத்தம்பாளையம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வாங்கிச் செல்கின்றனர். கன்றாக இருக்கும் பருவத்திலேயே ஜல்லிக்கட்டுக்கு பயிற்சி அளிக்கின்றனர். இப்பகுதியிலிருந்து வாங்கிச் செல்லும் காளைகள் பல்வேறு போட்டிகளில் பரிசுகளையும் வென்று சாதனை படக்கின்றன.

இது குறித்து கூமாப்பட்டி மலை மாடுகள் வளர்ப்போர் நலச்சங்க தலைவர் மாயக்கண்ணன் கூறுகையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நாட்டு இன மலை மாடுகளை மேய்க்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், மலைப்பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது. மேலும், மலைப்பகுதிக்குள் மாடுகளை மேய்க்க சென்றால் மேய்ப்பவர்களை கைது செய்து வனத்துறையினர் சிறையில் அடைக்கின்றனர். இதனால், தங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மாடுகளை வளர்க்க முடியாமல் விற்க கூடிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். அரசு தனிக்வனம் செலுத்தி மலைப்பகுதியில் மலை மாடுகளை மேய்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மேற்கு தொடர்ச்சி மலை காப்புக்காடு ஆகும். இங்கு பல்வேறு உயிரினங்கள் வாழ்கின்றன. மேய்ச்சலுக்காக செல்லும் மாடுகளால் வனவிலங்குகளுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது. மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளால் அந்த மலைப்பகுதியில் உள்ள புல்லை சாப்பிடுவதால் மண்ணின் உறுதி தன்மை குறைந்து மண்ணரிப்பு ஏற்பட்டு வனத்தின் வளம் குறைகிறது. மேலும், தற்போது இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்தான் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. தடையை மீறி வனப்பகுதிக்குள் மலை மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதால் மேய்ச்சல் வன குற்றமாக கருதி கைது செய்யப்படுகின்றனர். இங்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான்’ என்றார்.

The post மலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு தடையால் பாதிக்கப்படும் நாட்டு இன மலை மாடுகள்: பராமரிப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி appeared first on Dinakaran.

Tags : Vathirayiru ,Western Ghats ,
× RELATED வத்திராயிருப்பில் நெல் கொள்முதல்...