கடலூர்: கன்னியாகுமரி-வாரணாசி புதிதாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலுக்கு கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் இன்று காலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள், ரயில் பயணிகள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் இருந்து வாரணாசிக்கும், வாரணாசியிலிருந்து கன்னியாகுமரிக்கும் வாரத்திற்கு ஒருமுறை ரயில் புதிதாக இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது வியாழக்கிழமை இரவு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை வாரணாசியை சென்று அடைகிறது. இந்த ரயிலானது கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இந்நிலையில் இன்று காலை கடலூர் முதுநகர் ரயில் நிலையத்துக்கு முதல் முறையாக வந்த சிறப்பு ரயிலுக்கு ரயில்வே டிவிசன் இன்ஜினியர், அருள்பிரகாஷ், டாக்டர் ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.
இந்த ரயிலில் உள்ள பெட்டிகள் அனைத்தும் நவீன வசதியுடன் புதிய பெட்டிகளாக அமைக்கப் பட்டுள்ளது. இந்த ரயிலானது வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை புறப்பட்டு மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கடலூர் முதுநகர் ரயில் நிலையத்துக்கு வந்து கன்னியாகுமரிக்கு செல்லும். இன்று காலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள், ரயில் பயணிகள் கலந்து கொண்டனர். வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ள நிலையில் கடலூர் வழியாக வாரணாசிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
The post கன்னியாகுமரி- வாரணாசி சிறப்பு ரயிலுக்கு கடலூர் முதுநகர் ரயில் நிலையத்தில் வரவேற்பு appeared first on Dinakaran.