×

800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஜனவரியில் அத்திப்பட்டு அனல்மின் நிலையம் செயல்படும்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

சென்னை: திருவள்ளுவர் மாவட்டம் அத்திப்பட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அனல் மின் நிலையம் வருகிற ஜனவரி மாதம் செயல்படத் தொடங்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தை அனல் மின்நிலையங்கள், நீர்மின்நிலையங்கள், சூரிய ஒளி மற்றும் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது திருவள்ளுவர் மாவட்டத்தில் அத்திப்பட்டு என்ற இடத்தில் புதிதாக அனல் மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த அனல் நிலையம் வருகிற ஜனவரியில் திறக்கப்பட்டு உடனடியாக மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தமிழ்நாட்டில் மிகப்பெரிய என கூறப்படுகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த அனல் மின் நிலையம் ரூ.6,500 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் தற்போது முடிவடைந்து செயல்பட தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனல் மின் நிலையங்களை விட இது மிகப் பெரியது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனை விட 5 மடங்குபெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணியை முடித்து 2019லேயே மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டோம். ஆனால் கொரோனா பாதிப்பு மற்றும் தொழில்நுட்ப தடங்கல் காரணமாக இந்த அனல் நிலையம் கட்டுமானப் பணி முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த ஆண்டு துவக்கத்தில் 93.80 சதவீதம் பணிகள் நிறைவடைந்திருந்தது. இந்த திட்டத்தில் கொதிகலன் நீர் அழுத்த சோதனை, துணை கொதிகலன் எரியூட்டும் சோதனை, கொதிகலன் நீர் வெளியேற்ற முடியாத பகுதியின் நீர் அழுத்த சோதனை ஆகிய முக்கிய பணிகள் முடிக்கப்பட்டது. தற்போது கட்டுமானப் பணி முடிந்து செயல்பட தயாராக உள்ளது. இந்த அனல் மின் நிலையத்துக்கு ஒடிசா மாநிலத்தில் இருந்தும், தெலங்கானா மாநிலத்தின் சுரங்கங்களில் இருந்தும் நிலக்கரி பெறப்பட உள்ளது.

அதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. மேலும் எண்ணூர், தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்கள் வழியாக கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டுவரப்படும். தெலங்கானா மாநிலம் சிங்கனேரி சுரங்கத்திலிருந்து பெறப்படும் நிலக்கரி ரயில் மூலம் எடுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அனல் நிலையம் வருகிற ஜனவரியில் திறக்கப்பட்டு உடனடியாக மின் உற்பத்தி தொடங்கப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது ஜனவரியில் அத்திப்பட்டு அனல்மின் நிலையம் செயல்படும்: மின்வாரிய அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Analmin plant ,Chennai ,Thiruvallwar district ,Attipat ,Analmin ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...