சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எதிர்க்கட்சியாக நாங்கள் இருந்தபோது விஜயகாந்த் யாருக்கெல்லாம் எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் எல்லாம் துரோகம் செய்து விட்டார்கள். அந்த வலியும், வேதனையும் தான் விஜயகாந்த் வீழ்ச்சிக்கு காரணம். குறிப்பாக, உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டார். கட்சியும் சரிவை சந்தித்தது. நாங்கள் முடிவு எடுத்தது போல கடந்த 14ம் தேதி செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடத்தினோம். என்னை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
விஜயகாந்துக்கு எப்படி எம்ஜிஆர் ஒரு அரசியல் குருவாக இருந்தாரோ, அதேபோல் ஜெயலலிதாவை எனது ரோல் மாடலாக எடுத்துக் கொள்கிறேன். 6000 ரூபாய் வெள்ள நிவாரணம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. எந்த ஒரு பாகுபாடும் இல்லாமல் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நிவாரணம் போய் சேர வேண்டும். 4 மாவட்டம் அல்லாமல் கடலோர மாவட்டங்களில் வசிக்கக்கூடிய மக்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
மழைநீர் தேங்காத வகையில் நல்ல ஒரு திட்டங்களை கொண்டு வர வேண்டும். கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். தயவுசெய்து விஜயகாந்த் பற்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
வாழ்த்தியவர்களுக்கு நன்றி
தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், சசிகலா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமக தலைவர் அன்புமணி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், பாமக ஜி.கே.மணி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மற்றும் தொலைபேசி, சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரிலும் வாழ்த்து தெரிவித்த தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரேமலதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
The post தேமுதிகவில் இருந்த துரோகிகள்தான் விஜயகாந்த் வீழ்ச்சிக்கு காரணம்: பிரேமலதா பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.