×

மகத்துவம் நிறைந்த மார்கழி

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாகும். தமிழில் பன்னிரண்டு மாதங்கள் இருக்க மார்கழி மாதத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள்?

ஏனெனில், பகவத்கீதையில் “உலகின் அனைத்தும் நான்தான்’’ என்று கூறியிருக்கும் பகவான் கிருஷ்ணர், தமிழ் மாதங்களில் நான் `மார்கழியாக’ இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இந்த மாதங்களில் பிறப்பதும், இறப்பதும் புண்ணியம் என நம்பப்படுகிறது. மார்கழியின் மாதம் கடவுள் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்டது. இது டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது.

இந்த மாதம் என்பது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாகும். பொதுவாகவே, காலை நேரம் என்பது தியானத்திற்கு சிறந்த நேரமாகும். ரங்கநாதரின் உறைவிடமான ரங்கத்தில், 21 நாட்கள் ராப்பத்து மற்றும் பகல்பத்து என்று வழிபாடு நடைபெறும். அனைத்து கோயில்களிலும் காலை நேரத்தில் திருவெம்பாவை பாடப்படும்.

பாவைநோன்பு, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி மற்றும் ஆருத்ரா தரிசனம் என, மார்கழி மாத்தின் பெருமை கூறி நிற்கின்றன.

பஜனை

மார்கழி மாதத்தின் 30 நாளும் காலையில் ஓசோன் படலம் சூரியன் உதிக்கும் முன்னர் அதிகாலையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதிகாலையில் இந்த காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆண்கள் பஜனை பாடவும், பெண்கள் கோலம் போடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் கோயிலுக்கு செல்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. நமது சடங்குகளும், கலாச்சாரங்களும் எப்போதும் நமது ஆரோக்கியத்தை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டதாகும்.

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒளியை விண்மீன் மண்டலத்தின் மையத்திற்கும், பூமிக்கும் எதிரொளிக்கிறது. இந்த கிரகங்களில் பூமிக்கு அதிக ஒளி கொடுக்கும் கிரகம் குரு ஆகும். குருபகவான்தான், நம் வாழ்வில் உள்ள இருளை போக்கும் சக்தி படைத்தவராவார். எனவே இந்த மாதம் தெய்வீகமான குரு மாதமாக
கருதப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள், அன்று முழுவதும் சாதம் செய்து சாப்பிடக்கூடாது. நாள் முழுவதும் விஷ்ணுவின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, காலை நேரத்தில் கோயிலுக்கு சென்று விஷ்ணுவின் அருளை பெறவேண்டும். அந்த நேரத்தில் சொர்க்கம் அல்லது வைகுண்டத்தின் வாசல் திறந் திருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

சிவ வழிபாடு

மார்கழி மாதத்தின் பவுர்ணமி நாள், திருவாதிரையாக சிவபெருமான் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, சிதம்பரத்தில் இது மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், களி என்னும் பிரசாதம் செய்யப்பட்டு சிவபெருமானுக்கு படைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை கொண்டு சிவபெருமான் பூஜிக்கப்படுகிறார். திருவாதிரை மட்டுமின்றி மார்கழி மாதம் முழுவதுமே சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்வின் இருளை போக்கி செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

தொகுப்பு: அனுஷா

The post மகத்துவம் நிறைந்த மார்கழி appeared first on Dinakaran.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்