×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி சாட்சி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்த வேண்டும்: வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக 2019ம் ஆண்டு தற்போது அதிமுக பொது செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது. தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமென கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்ற உயர் நீதிமன்றம், நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்ததோடு, இந்த நடைமுறையை அவரது வீட்டில் மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலனை நியமித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென்று கோரினார். அப்போது, மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்பதற்கு கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று ஏற்கனவே கூறியுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பான பாதுகாப்புகளை வழங்கி வருவதால், எடப்பாடி பழனிசாமி மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக அவரது வழக்கறிஞர் அறிவுறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: எடப்பாடி சாட்சி விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்த வேண்டும்: வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Edappadi ,Chennai ,Delhi ,Mathew Samuel ,
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...