×

மனைவியுடன் பேசிய உறவினரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பொம்மிடி விடிவெள்ளி நகரைச் சேர்ந்தவர் முனியப்பன் (35), கூலிதொழிலாளி. இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஈஸ்வரன் என்ற தொப்புரான்(42). இவரது முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து சங்கீதா என்பவரை 2வதாக திருமணம் செய்துகொண்டார். முனியப்பனும், ஈஸ்வரனும் உறவினர்கள். இதனால் முனியப்பனுடன், சங்கீதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி பேசுவதை பார்த்த ஈஸ்வரன், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கண்டித்துள்ளார். இதனால் முனியப்பனுக்கும், ஈஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 10ம்தேதி, ஊரில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அப்போது முனியப்பன் சாமி கும்பிட கோயிலுக்கு சென்றார். அங்கு வந்த ஈஸ்வரனுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் ஈஸ்வரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முனியப்பனை சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, ஈஸ்வரனை கைது செய்தனர்.தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார். முனியப்பனை கொலை செய்த ஈஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

The post மனைவியுடன் பேசிய உறவினரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Muniyappan ,Pommidi Vidivelli ,Dharmapuri district ,Satya ,
× RELATED மின்னல் தாக்கி ரயில்வே போலீஸ், பெண் பரிதாப சாவு