×

சென்னை கோட்டூர்புரம் கார்டன் சாய்பாபா கோயிலின் பூட்டை உடைத்து 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!!

சென்னை: சென்னை கோட்டூர்புரம் கார்டன் சாய்பாபா கோயிலின் பூட்டை உடைத்து 4.5 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை கோட்டூர் கார்டன் 2வது பிரதான சாலையில் ‘ஸ்ரீஆனந்த சாய்பாபா’ என்ற பெயரில் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஆனந்தன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் நேற்று முன்தினம் கோயில் பூட்டப்பட்டது. பிறகு மறுநாள் கோயிலின் கதவை திறக்க பூசாரி வந்த போது, கோயில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே கோயில் நிர்வாகியான வெங்கட கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி உமா மகேஸ்வரியிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதார். கோயில் நிர்வாகி விரைந்து வந்து பார்த்த போது, கோயிலின் கருவறையில் வைத்திருந்த 4.5 கிலோ மதிப்புள்ள வெள்ளி பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி கவசம் மாயமாகி இருந்தது. பின்னர் சம்பவம் குறித்து கோயில் நிர்வாகி வெங்கடகிருஷ்ணன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோயில் அமைந்துள்ள சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோட்டூர் கார்டன் பகுதியில் கோயிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை கோட்டூர்புரம் கார்டன் சாய்பாபா கோயிலின் பூட்டை உடைத்து 4.5 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை!! appeared first on Dinakaran.

Tags : Chennai Kotturpuram Garden Saibaba ,Chennai ,Chennai Kotturpuram Garden Saibaba Temple ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...