×

7 ஆண்டுகளுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!!

சென்னை: 7 ஆண்டுகளுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. கடந்த 2016 நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடந்தது. அந்த நிர்வாகிகளின் பதவிக்காலம் 201ல் முடிவடைந்தது. இதை தொடர்ந்து வழக்குகள் காரணமாக தேர்தல் தள்ளிப்போனது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்த மூத்த வழக்கறிஞர் கபீரை தேர்தல் அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 9ம் தேதி தேர்தல் அறிவிக்கபட்டது. அன்று வாக்குப்பதிவு தொடங்கியதும் வழக்கறிஞர்கள் இடையே மோதல் காரணமாக தேர்தல் ரத்து செய்யபட்டது.

இந்த நிலையில் மீண்டும் டிசம்பர் 15ம் தேதி (இன்று) தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் சுமார் 4,752 வழக்கறிஞர்கள் வாக்களிக்க உள்ளனர். தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர், நூலகர், 6 மூத்த செயற்குழு உறுப்பினர்கள், 5 இளைய செயற்குழு உறுப்பினர்கள் என 16 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.தலைவர் பதவிக்கு ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.சி.பால்கனகராஜ், எம்.வேல்முருகன், சத்தியபால் உள்ளிட்ட 9 பேர் போட்டியிடுகின்றனர். துணைத்தலைவர் பதவிக்கு அப்துல்ரஹ்மான், அறிவழகன், கோபால், முரளி உள்ளிட்ட 8 பேரும், செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார், காமராஜ் உள்ளிட்ட 10 பேரும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு ராஜேஷ், ஆனந்த் ஆகிய 9 பேர் போட்டியில் உள்ளனர். நூலகர் பதவிக்கு ரகு, விஜயராஜ், போத்ராஜ் உள்ளிட்ட 11 பேரும், மூத்த செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 42 பேரும், இளைய செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 35 பேரும் போட்டியிடுகின்றனர்.தேர்தலை சுமுகமாக நடத்துவதற்காக மத்திய தொழில் பாதுகாப்பு படையும், மாநில காவல் துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை முழுவதும் சங்கத்தின் இணைய தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததும் மாலை 6 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். முதலில் தலைவர் பதவிக்கும், பின்னர் துணைத்தலைவர் பதவிக்கும், செயலாளர் பதவிக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

The post 7 ஆண்டுகளுக்கு பின் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Madras High Court Bar Association ,CHENNAI ,Madras High Court ,Madras High Court Advocates Association ,Dinakaran ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை...