×

சாலையோரம் நிறுத்தியிருந்த கார் மீது ஜீப் மோதி 2 பேர் பலி 4 பேர் படுகாயம் திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, டிச.14: திருவண்ணாமலை அருகே சாலையோரம் நின்றிருந்த கார் மீது, ஜீப் மோதிய விபத்தில் விவசாயி உட்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருவண்ணாமலை அடுத்த கொல்லைக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி(50), விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை- செங்கம் சாலையில் அத்தியந்தல் கிராமத்தில் உள்ள நிலத்துக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சின்னகோலப்பாடி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அவரது நண்பர்கள் ஆகாஷ், ராஜேஷ் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தார். இந்நிலையில், செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வேகமாக வந்த ஜீப் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த நாராயணமூர்த்தி மீது மோதியது. அதில், அவர் படுகாயம் அடைந்தார். மேலும், சாலையோரம் நிறுத்தியிருந்த கார் மீதும் ஜீப் மோதியதால், அங்கிருந்த 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து, விபத்தில் சிக்கிய காரும், கட்டுப்பாட்டை இழந்த ஜீப்பும் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. அதனால், ஜீப்பில் பயணம் செய்த திருவண்ணாமலை தேனிமலை பகுதியை சேர்ந்த சரத்(29), அதை ஓட்டி வந்த டிரைவர் ரவி ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, அங்கிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த ரோந்துப் பணி போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி விவசாயி நாராயணமூர்த்தி நேற்று முன்தினம் இறந்தார். மேலும், தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த வாலிபர் சரத் நேற்று காலை இறந்தார். அதனால், உயிரிழப்பு 2ஆக உயர்ந்தது. மேலும், சிவக்குமார், ஆகாஷ், அஜய் மற்றும் டிரைவர் ரவி ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலையோரம் நிறுத்தியிருந்த கார் மீது ஜீப் மோதி 2 பேர் பலி 4 பேர் படுகாயம் திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Tags : Padukayam ,Thiruvannamalai ,Jeep ,Tiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...