×

என் மகன் நல்லவன், நேர்மையானவன், சமூக பணியில் ஆர்வம் கொண்டவர்: மக்களவையில் கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவனின் தந்தை பேட்டி

பெங்களூரு: என் மகன் நல்லவன், நேர்மையானவன், சமூக பணியில் ஆர்வம் கொண்டவர் என்று மக்களவையில் கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவனின் தந்தை தேவராஜ் தெரிவித்துள்ளார். மக்களவையில் அத்துமீறி நுழைந்த இருவரை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். முழக்கங்களை எழுப்பியபடி மேஜையில் தாவிக் குதித்து தப்பிக்க முயன்ற நபர்களை எம்.பி.க்கள் பிடித்தனர். புகை குண்டுகளை திறந்ததால் நாடாளுமன்றத்தில் மஞ்சள் நிறத்தில் புகை எழுந்தது. இச்சம்பவத்தில் ஒரு சில எம்.பி.க்கள் அச்சத்துடன் ஓட முயன்றனர். ஆனால், ஒரு சில எம்.பிக்கள் அஞ்சாமல் அவர்களை பிடித்து சபை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர்.

இதனிடையே, மக்களவையின் உள்ளே நுழைந்த ஆண்களுக்கு ஆதரவாக வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. வெளியே தாக்குதல் நடத்திய இரண்டு பெண்களின் பெயர் நீலம், அன்மோல்ஷிண்டே எனவும், அவர்களில் ஒருவர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் மற்றொருவர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது. அதேபோல், மக்களவையின் உள்ளே தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரது பெயர் சாகர் ஷர்மா எனவும், மற்றொருவர் பெயர் மனோரஞ்சன் என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துமீறி நுழைந்தவர்களில் மனோ ரஞ்சன் என்பவர் மைசூரு அருகே பெரியப்பட்டணா பகுதியை சேர்ந்த பொறியியல் மாணவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவன் மனோ ரஞ்சனின் தந்தை தேவராஜ் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், என் மகன் நல்லவன், நேர்மையானவன், சமூக பணியில் ஆர்வம் கொண்டவர். சமூதாய நலனுக்காக தன்னை தியாகம் செய்வதை விரும்புபவன்.

சுவாமி விவேகானந்தர் புத்தகங்களை படித்ததால் அவருக்கு இந்த மனநிலை வந்ததா என தெரியவில்லை. நாங்கள் பிரதாப் சிம்ஹாவின் நாடாளுமன்ற தொகுதியில் வசிக்கிறோம். எனது மகனின் செயலை வன்மையாக கண்டிக்கிறேன் இதை யார் செய்திருந்தாலும் தவறு தான். எனது மகன் ஒருசிலரால் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிட்டார்.

The post என் மகன் நல்லவன், நேர்மையானவன், சமூக பணியில் ஆர்வம் கொண்டவர்: மக்களவையில் கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவனின் தந்தை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Loka ,Bangalore ,Laka ,Lokawa ,
× RELATED ஆபாச வீடியோ சர்ச்சை: பெங்களூருவில்...