×

நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரத்தில் மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம்

 

நிலக்கோட்டை, டிச. 13: நிலக்கோட்டையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம், ஊர்வலம் நேற்று நடைபெற்றது. பேரூராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காசிமாயன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், மாவட்ட குழு உறுப்பினர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு கொண்டு வரும் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து புதிய வரைவுகளும் பொதுமக்கள், விவசாயிகளுக்கு எதிராகவும் மற்றும் சிறு- குறு தொழில்களை முடக்கும் வகையிலும் இருப்பதால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அனைவரும் நால்ரோடு, மார்க்கெட், அணைப்பட்டி சாலை வழியாக நிலக்கோட்டை மின்பகிர்மான வட்டார அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று மின் பொறியாளரிடம் மனு அளித்தனர்.

இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விவசாய சங்க ஒன்றிய துணை தலைவர் பால்ராஜ் நன்றி கூறினார். ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் சார்பில் மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். விவசாய சங்க ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் தயாளன், ஒன்றிய பொருளாளர் தங்கசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டுபின்னர் மின்வாரிய அதிகாரியிடம் மனு அளித்தனர்.

 

The post நிலக்கோட்டை, ரெட்டியார்சத்திரத்தில் மின்வாரிய அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilakottai, Redyarchatram ,Nilakottai ,Tamil Nadu Farmers' Association ,Rediyarchatra ,Dinakaran ,
× RELATED நிலக்கோட்டை சக்கையநாயக்கனூரில்...