×

சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பம்பையில் 5 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் தொடர்ந்து பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. நெரிசலைக் கட்டுப்படுத்த பல இடங்களில் வாகனங்களையும், பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் உணவு, குடிநீர் இல்லாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த சில தினங்களாக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகள் செய்யப்படாததால் கடும் அவதியடைந்து வருகின்றனர். கேரள உயர் நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு தரிசன நேரம் ஒரு மணிநேரம் அதிகரிக்கப்பட்டது. மேலும் தினசரி தரிசன முன்பதிவு எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகளால் எந்த பலனும் ஏற்படவில்லை. நேற்றும் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்ததால் பம்பையில் 5 மணிநேரத்திற்கு மேல் பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மேலும் பத்தனம்திட்டா, எருமேலியில் இருந்து சபரிமலை செல்லும் வழியில் வாகனங்களை பல மணிநேரம் போலீசார் தடுத்து நிறுத்தினர். இது பக்தர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் முதல்வர் கூறியதாவது: மண்டல காலத்தில் முதல் 19 நாட்களில் சராசரியாக தினமும் 62 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். ஆனால் டிசம்பர் 6 முதல் இந்த எண்ணிக்கை 88 ஆயிரமாக உயர்ந்தது. இதனால் தான் நெரிசல் ஏற்பட்டது. இதை சமாளிக்க தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. உடனடி முன்பதிவு வசதியை அத்தியாவசிய கட்டங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் கூடுதல் வசதி ஏற்படுத்த கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பம்பையில் 5 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : BAMBA ,SABARIMALA ,Thiruvananthapuram ,Bomba ,
× RELATED சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப...