×

கொடநாடு விவகாரத்தில் இபிஎஸ்சிடம் சாட்சியம் பதிவுக்கு வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், சாட்சியங்களை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்துள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்தது. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டுமெனவும் கோரி எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார் நேற்று விசாரித்து, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலன் நியமிக்கப்படுகிறார். அவர் ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டும். அதனை அறிக்கையாக ஜனவரி 12ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

 

The post கொடநாடு விவகாரத்தில் இபிஎஸ்சிடம் சாட்சியம் பதிவுக்கு வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : EPSC ,Koda Nadu ,Chennai ,Kanakaraj ,Dhanapal ,Dinakaran ,
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...