காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே நடுவீரப்பட்டு ஏரியில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இன்று மாலைகுள் ஏறி உடைப்பு முழுமையாக சீரமைக்கபடும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார். அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் கண்மாய்கள் நிரம்பி காணப்படுகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சோமமங்கலம் அடுத்துள்ள நடுவீரப்பட்டு ஊராட்சியில் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியில் அதிகாலை 3 மணி அளவில் உடைப்பு ஏற்பட்டு கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுள் நீர் புகுந்தது. சுமார் 20 அடி அகலத்திற்கு ஏரியின் கரை உடைப்பு ஏற்பட்டு வயல்வெளி வழியாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பஜனை கோயில் தெரு, நாகாத்தம்மன் கொயில் தெரு உள்ளிட்ட இடங்களில் ஏரிநீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் 1000க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள பள்ளியில் முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நடுவீரப்பட்டு கிராமத்தில் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் ஏக்கருக்கு 25,000 வழங்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நடுவீரப்பட்டு ஏரி ஆக்கிரமிப்பு நபர்களால் உடைக்கப்பட்டதா அல்லது தானாக உடைந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஏரியில் ஏற்பட்ட உடைப்பை மணல் மூட்டைகளை வைத்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் இன்று மாலைக்குள் நடுவீரப்பட்டு ஏரி உடைப்பு முழுமையாக சீரமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து நடுவீரப்பட்டு அரசு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்.
The post குன்றத்தூர் அருகே நடுவீரப்பட்டு ஏரியில் உடைப்பு: தற்காலிகமாக மணல் மூட்டைகளை வைத்து சீரமைப்பு appeared first on Dinakaran.