×

டிச.15-ம் தேதி மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: டிச.15-ம் தேதி மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; விவசாயப் பெருங்குடி மக்கள் தங்கள் நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் தேவையான தண்ணீரை அணைகளில் இருந்து குறித்த காலத்தில் திறந்துவிடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தால், விவசாயிகள் பெரும் துயரத்தில் வாடுகின்றனர்.

அதிமுக ஆட்சிக் காலங்களில், மதுரை மாவட்டம், மேலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள சுமார் 85 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் ஒருபோக விவசாயம் செய்து பயனடைந்து வந்தனர். ஆனால், தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய நிலங்களில் ஒருபோக விவசாயம் செய்வதற்கு அரசு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிடவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், அரசிடமும் பல்வேறு கோரிக்கைகள் வைத்தும், தங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என விவசாயிகள் பெரியதும் ஆதங்கப்படுகின்றனர். இந்நிலையில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளில் இருந்து, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதியில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு தண்ணீர் திறந்துவிடாத அரசைக் கண்டித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும், அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 15.12.2023 வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், மேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான V.V. ராஜன் செல்லப்பா, M.L.A., தலைமையிலும்; மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் P. பெரியபுள்ளான் (எ) செல்வம், M.L.A., முன்னிலையிலும் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்களும், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post டிச.15-ம் தேதி மதுரை மேலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Adimuka ,Madurai Malur ,Edappadi ,Chennai ,Edappadi Palanisami ,Madurai Melur ,Dinakaran ,
× RELATED விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு...