தொட்டியம்: திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரை காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்தினர் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வார்கள். அதுமட்டுமன்றி இங்கு தினமும் நடைபெறும் சிறப்பு பூஜைகளிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
வழக்கம்போல நேற்று மாலை கோயில் பூசாரி மருதை, மதுரை காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மேற்கொண்டு பூஜை செய்தார். அப்போது அம்மன் கழுத்தில் கிடந்த தாலி சிறிதுநேரம் கழித்து பார்த்தபோது மாயமாகி இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பூசாரி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் விஜய்ஆனந்த்துக்கு தகவல் கொடுத்தார். அவர் தொட்டியம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.
15 சவரன் மதிப்புள்ள அம்மன் கழுத்தில் கிடந்த தாலி, பொட்டு, மாங்கல்யம், தாலி குண்டு, கருகமணி உள்ளிட்ட திருட்டு போன நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில் பக்தர்களோடு பக்தர்களாக வந்த ஒரு தம்பதி இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post தொட்டியம் மதுரை காளியம்மன் கோயிலில் ரூ.10 லட்சம் மதிப்பு அம்மன் நகை திருட்டு: தம்பதிக்கு வலை appeared first on Dinakaran.