×

குளித்தலை அருகே சீகம்பட்டி புதுப்பட்டியில் சடலத்தை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம்

*மயான பாதை அமைக்க மக்கள் கோரிக்கை

குளித்தலை : குளித்தலை அருகே கருப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சீகம்பட்டி புதுப்பட்டியில் இறந்தவர் சடலத்தை மயானத்திற்கு கொண்டுசெல்ல வழியில்லாமல் விவசாய நெல்பயிர் வயலில் சடலத்தை தூக்கிச் செல்லும் அவல நிலை உள்ளது. மயான பாதை அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் கருப்புத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சீகம்பட்டி புதுப்பட்டியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

பல ஆண்டுகளாக அப்பகுதியில் யாராவது இறந்தால் அடக்கம் செய்வதற்கு முறையான மயானபாதை, மின்விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. அப்பகுதி பொதுமக்கள் மயான பாதை வசதி வேண்டி மாவட்ட அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கருப்பத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சீகம்பட்டி புதுப்பட்டியில் வயது முதிர்வின் காரணமாக இறந்த மருதாயி(70) என்பவர் சடலத்தை மயானத்திற்கு கொண்டு செல்ல வழியில்லாமல் வாய்க்கால் மற்றும் விவசாய நெற்பயிர் வயலில் சடலத்தை தூக்கிக்கொண்டு வயல்வெளி பகுதிகளில் வழுக்கி கீழே தவறி விழுந்து கொண்டு சென்ற அவலம் நடைபெற்றது. இது போன்று ஏற்கனவே இரண்டு சடலங்கள் எடுத்துச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல பாதை மற்றும் மயான கொட்டகை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளித்தலை அருகே சீகம்பட்டி புதுப்பட்டியில் சடலத்தை வயல் வழியே தூக்கி செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Sigampatti Pudhupatti ,Kulithalai ,Seegambatti Pudhupatti ,Karuppattur ,Panchayat ,Kulithali ,
× RELATED கரூரில் நாய்களிடம் கடிபட்டு புள்ளி மான் உயிரிழப்பு..!!